லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு தயாராக உள்ளோம்.. அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பேட்டி
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் யார் கூட்டணி என்று அறிவதை விட.. அதிமுக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பதுதான் தினசரி அனைத்து தரப்பினரும் பேசும் விஷயமாகிவிட்டது. தனித்தே நிற்போம்.. தமிழகத்துக்கு நிதி கிடைக்கவில்லை என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருக்கிறார்.
அதிமுகவில் கூட்டணி குறித்து கலவையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. அதன் மற்றொரு அத்தியாயமாக.. அமைச்சர் ஜெயக்குமார், லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
கூட்டணி முடிவு
சென்னையில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: லோக்சபா தேர்தலின் போது, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் யாருடன் கூட்டணி குறித்துமுடிவு செய்யப்படும். கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது வரை தொடங்கப்படவில்லை.
எதிர்க்கட்சிகள் மீது புகார்
கொடநாடு விவகாரத்தை ஆயுதமாக எடுத்துள்ள எதிர்க்கட்சியினர் மண்ணை கவ்வுவார்கள். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். கொடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அதிமுக தயங்கவில்லை.
ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
கொடநாடு விவகாரத்தை பயன்படுத்தி ஸ்டாலினும், டிடிவி தினகரனும் ஆட்சியை கவிழ்க்க நினைக்கின்றனர். சாம்பிராணி புகை வந்தாலே யாகம் நடத்தப்படுவதாக தவறாக பேசுவதா? சாமி கும்பிட்டது தவறு என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமானது. சாமி கும்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது.
அஜித்துக்கு பாராட்டுகள்
தாம் செய்கின்ற தொழிலில் பக்தி மிக்கவர் நடிகர் அஜித். அரசியல் குறித்து திறந்த மனதுடன் தமது நிலைப்பாட்டை கூறிய அஜித்துக்கு பாராட்டுகள். மறைந்த கருணாநிதி முன்பே தைரியமாக பேசியவர் அஜித்குமார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.