'பேக்கரி' டீலிங் அறிவாலய வழக்கம்! அதிமுகவை பற்றி ‘வாயிற்காவலர்’ ஆர்எஸ் பாரதி பேசலாமா? ஐடி விங் பொளேர்
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆர்.எஸ். பாரதிக்கு அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மரணமடைந்த நிலையில் அந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் களம் இறங்குகின்றன.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறியுள்ளது. ஆளுங் கட்சியின் பண பலம் காரணமாக தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளரான ஆர்எஸ் பாரதி,"இந்தியாவில் தமிழகத்தில் தான் வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை முதன் முறையாக அதிமுக தான் கொண்டு வந்தது. 1992ல் பரங்கிமலை பகுதியில் நடைபெற்ற தேர்தலில் வன்முறை செய்ததோடு வாக்குச்சாவடியை கைப்பற்றி இந்த முறையை அறிமுகப்படுத்தினர்.
2000 வாக்குகள் உள்ள வாக்குச்சாவடியில் 2300 வாக்குகள் போட்டதுதான் அதிமுக. ஆலந்தூர் நகராட்சியில் 20 பூத்துகளில் 2000 ஓட்டுகளுக்கு பதில் 2300 ஓட்டுக்களை அதிமுகவினர் போட்டிருக்கின்றனர். இடைத்தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் யாருடைய ஆளாக இருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும். எப்படியாவது பாஜகவோடு மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தேர்தலை புறக்கணிக்கும் எனக் கூறியிருக்கிறார்.

அதிமுக நடத்திய வாக்குச்சாவடி கைப்பற்றும் கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதற்கு திமுகவை குறை கூறக்கூடாது. விக்கிரவாண்டி தேர்தலில் டெபாசிட் போய்விடும் என்ற பயத்தின் காரணமாகவே அதிமுகவினர் பிதற்றி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை புறக்கணித்துள்ளதால் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் ஓட்டு போட மாட்டார்களா? ஓட்டு போட வேண்டாம் என கட்சிக்காரர்களை கேட்கும் தைரியம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறதா?
வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை கொடுத்தவர் கலைஞர். வன்னிய மக்களுக்கு கலைஞர் செய்த நன்மை காரணமாக திமுக வெற்றி பெறும். திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டால் தான் உயர்வு பெற்றோம் என்பதை வன்னிய மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என பேசி இருந்தார்.
இந்நிலையில் ஆர்எஸ் பாரதியின் இந்த பேச்சுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான எக்ஸ் பதிவில்,"நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அஇஅதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையான வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தும் அறிவாலய வாயிற்காவலர் ஆர்.எஸ்.பாரதி, டெபாசிட் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. எவ்வித இடையூறுமின்றி இடைத்தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பது திமுக தான் என்பதை நாடறியும். அதை 2026 சொல்லும்!
திருமங்கலம் முதல் ஈரோடு கிழக்கு வரை பல்வேறு பார்முலாக்களை வகுத்த ஊழல் விஞ்ஞானிகளான திமுகவினர், வாக்குச்சாவடி கைப்பற்றுவது பற்றி பேசுவதா? Under டீலிங், பேக்கரி டீலிங் எல்லாம் உங்கள் அறிவாலய வழக்கமாக இருக்கலாம். அதிமுக என்றன்றைக்கும் நேர்மையாக செயல்படும் நெஞ்சுரத்துடன் மக்களை சந்திக்கும் இயக்கம்!" என பதிலடி கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications