அதிமுக சொன்ன நேரம்.. மீண்டும் முட்டிக்கொண்ட தலைகள்.. உச்சம் தொட்ட ஆளுநர் - முதல்வர் ஸ்டாலின் மோதல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் - தமிழக முதல்வர் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு இல்லாமல் இருந்த நிலையில், பாஜக - திமுக கூட்டணி அமைக்கத் தயாராகிவிட்டதாக அதிமுக தலைவர்கள் விமர்சித்திருந்தனர். அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி இடையே கருத்து மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் ஏழாம்பொருத்தமாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு தருணங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அரசுக்கு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதன் உச்சமாக, சட்டசபையில் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் சட்டசபையை புறக்கணித்தார் ஆளுநர் ரவி. மேலும், திராவிடம் பற்றி எதிர்மறையாக மேடைகளில் பேசி வருகிறார் ஆளுநர் ரவி.

mk stalin rn ravi aiadmk

முதல்வர் ஸ்டாலின் டெல்லியில்: இந்நிலையில், அண்மையில் டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியை சந்தித்து நிதி ஒதுக்கீடு பற்றி கோரிக்கை வைத்தார் முதல்வர் ஸ்டாலின். அதன்பிறகு, மத்திய அரசு, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்பிறகு தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

உயர்கல்வித் துறை பொறுப்பை வகிக்கும் பொன்முடிக்கு, அதனுடன் நேரடியாக தொடர்புடைய பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. ஆளுநர் உடனான மோதல் போக்கை தவிர்ப்பதற்காகவே இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது.

பாராட்டிய ஆளுநர் ரவி: இந்நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அண்மையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார் ஆளுநர் ரவி.

வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது. எதிர்பார்த்ததைப் போல அடுத்த 2 நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன் என்று ஆளுநர் தெரிவித்தார்.

mk stalin rn ravi aiadmk

உற்று கவனித்த அதிமுக: ஆளுநர் திடீரென, திமுக அரசை பாராட்டியது அனைவரையும் உற்று கவனிக்க வைத்தது. அதிமுக தலைவர்கள், இந்த மனமாற்றத்தை உடனடியாக கவனித்து தங்கள் விமர்சனங்களை வைத்தனர். ஆளுநர் திமுக அரசுடன் இணக்கமாகச் செல்லத் தொடங்கி இருப்பதாகவும், பாஜக - திமுக கூட்டணி உருவாகப்போகிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கமெண்ட் அடித்தனர்.

விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: திமுக அரசும், தமிழக ஆளுநரும் காதலர்கள்போல தற்போது இணக்கமாக உள்ளனர். புது காதலன், புது காதலி போல தமிழக அரசும், ஆளுநரும் உள்ளனர். ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஆளுநருக்கு எதிராக செயல்பட்டவர்கள் பின்பு முதல்வரும், மூத்த அமைச்சர்களும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்கள். முதல்வர் திடீரென டெல்லிக்கு செல்கிறார், பிரதமரை சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 7,500 கோடி ஒதுக்குகிறார்கள். ஏதோ தேன்நிலவு போல நடக்கிறது. ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்து சொல்வார். ஆனால், தற்போது மாறி இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி இருந்தார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது பிரதமர் மோடியை பார்த்து கும்பிடு போட்டாரோ அன்றிலிருந்து தமிழக ஆளுநர் தனது சுதியை மாற்றிகொண்டுவிட்டார். குற்றம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்த ஆளுநர், தமிழக அரசை வானளவு உயர்த்தி பேசி கொண்டிருக்கிறார். இன்று திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன. திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் காட்சிகளை விரைவில் நாம் பார்ப்போம் எனத் தெரிவித்தார் அதிமுக ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம்.

மீண்டும் தொடங்கிய வார்த்தைப் போர்: அடுத்த 2 நாட்களிலேயே மீண்டும் ஆளுநர் - முதல்வர் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், "தெக்கனமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரி தவிர்க்கப்பட்ட விவகாரத்தில் இருவருமே கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டுள்ளனர்.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி தின விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்று பேசினார். இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநர் உள்பட அனைவரும், எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது 'திராவிடம்' என்ற வார்த்தையை பாடாததால் சர்ச்சை ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடு' என்ற வார்த்தையை பாடாமல் அடுத்த வரியான 'தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே' என்று பாடினர்.

கொந்தளித்த ஸ்டாலின்: இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின், "ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்" என்று ட்வீட் செய்தார்.

mk stalin rn ravi aiadmk

அதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் ரவி தனது விளக்கத்தை அளித்திருந்தார். அதில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.

ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" என்று கூறினார்.

மீண்டும் ஸ்டாலின் பதிலடி: தமிழக முதல்வர், ஆளுநருக்கு மீண்டும் பதிலளித்து கேள்விகளை எழுப்பினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு, எனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள ஆளுநருக்குச் சில கேள்விகள்: 'தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்' எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை? 'பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்' என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் - உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?

'ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது' எனச் சொல்லியிருக்கிறீர்கள். ஆளுநர் அவர்களே, தமிழ் எங்கள் இனம். அது எங்கள் உயிர்மூச்சு. தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்! 'பாஜக அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவித் தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தைத் தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார் பிரதமர் மோடி' எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர்.

ஆளுநரின் வெறுப்பு: தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவதாக நீங்கள் கூறும் மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது? 2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதைவிட இரண்டரை மடங்கு அதிகம். இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது சம்ஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமில்ல, கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா? 'தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்' என்றும்; 'திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்' என்றும் கூறியதை மறக்க முடியுமா? 'திராவிட மாடல் காலாவதியான கொள்கை' என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?

mk stalin rn ravi aiadmk

தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா? தமிழ் மீது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது? பிரதமர் மோடி அறிமுகப்படுத்தும் திட்டங்கள், தொடர்வண்டிகள், முன்வைக்கும் முழக்கங்கள் என 'எங்கும் இந்தி - எதிலும் இந்தி' என்ற கொள்கையுடன் இந்தியைத் திணிப்பது நீங்கள்தான். ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசியல்சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், ஆளுநர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும் - திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்?

சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய ஆளுநர் உரையில் கூட திராவிட மாடல், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்? உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, 'திராவிடநல் திருநாடு' தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள். நீங்கள் ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+