அடுத்தடுத்து மேடையிலேயே மயங்கிய அதிமுக எம்எல்ஏக்கள்.. ஈபிஎஸ் தலைமையில் நடந்த போராட்டத்தில் பரபரப்பு!
சென்னை: ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில், அதிமுக தலைவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த பிப்.19ஆம் தேதி 12,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
சென்னை ராயபுரத்தில் 49ஆவது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு வந்திருந்தார்.

அந்த சமயத்தில் கள்ள ஓட்டுப் போட்டுவிட்டுத் தப்ப முயன்றதாகக் கூறி ஒருவரைப் பிடித்து அதிமுகவினர் தாக்கியுள்ளனர். மேலும், அந்த நபரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்தனர். ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாகச் சேலம் கோட்டை மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தமிழக அரசைக் கண்டித்துக் கண்டன கோஷங்களை எழுப்பினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் செம்மலை திடீரென மயங்கி மேடையில் விழுந்தார். அவரை உடன் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து சற்று நேரத்திலேயே வீரபாண்டி எம்எல்ஏ ராஜாமுத்துவும் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இப்படி ஒரே போராட்ட மேடையில் அதிமுக தலைவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications