பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லிக்கு ரகசியமாக சென்று எக்ஸ்போஸான அதிமுக ‘தலைகள்’.. போன ரூட் இதுதான்!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து புகார் தர டெல்லி சென்ற அதிமுக தலைவர்கள் தங்களது பயணம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கேரளா, கர்நாடகா வழியாக டெல்லி சென்ற சுவாரசிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன
பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கடும் விமர்சனம் அதிமுகவினரை கோபப்பட வைத்தது. ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல்பேர்வழி என அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையானது. அப்போது அண்ணாமலைக்கு எதிராக அதிமுக கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அண்ணா குறித்த அண்ணாமலை சர்ச்சை: இந்நிலையில் அண்ணா விவகாரத்தில் மீண்டும் ஆவேசத்தைக் காட்டியது அதிமுக. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அண்ணாமலையை எச்சரித்துப் பார்த்தனர். ஆனால் அண்ணாமலையோ தமது கருத்தில் உறுதியாக இருந்தார். இது அதிமுக தலைவர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனையடுத்தே அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக அறிவித்தது. இதற்கும் அசராத அண்ணாமலை, அமலாக்கத்துறை உள்ளிட்ட ரெய்டுகள் வரும் எனவும் மறைமுகமாக மிரட்டியிருந்தார்.
இறங்கிப் போன அதிமுக: ஒரு கட்டத்தில் அதிமுக இறங்கி போனது. டெல்லியில் மோடி பிரதமராக அதிமுக ஆதரவு தரும்; அதேபோல எடப்பாடி பழனிசாமி முதல்வராக பாஜக ஆதரவு தர வேண்டும் என அதிமுகவின் செல்லூர் ராஜூ ஒரு பேட்டி கொடுத்தார். ஆனால் அப்போதும் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஆதரவு தர முடியாது என அதிரடி காட்டினார்.
ரகசிய டெல்லி பயணம்: இதனையடுத்து டெல்லி சென்று பாஜக தலைமையிடம் புகார் தருவது என அதிமுக தலைமை முடிவெடுத்தது. இந்த டெல்லி பயணத்தை ரகசியமாக வைத்திருக்கவே அதிமுக தலைமை முதலில் விரும்பியது. இதற்காகவே சென்னை விமான நிலையத்தை அதிமுக தலைவர்கள் யாரும் பயன்படுத்தவும் இல்லை. டெல்லிக்கு போன 5 பேரும் ஒன்றாகவும் பயணிக்கவில்லை.
அதிமுக தலைகள் போன ரூட் இதுதான்: கேபி முனுசாமி, பெங்களூர் சென்று அங்கிருது டெல்லி சென்றிருக்கிறார். பாஜக தலைமையுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கும் வேலுமணியும் தங்கமணியும் கொச்சி சென்று டெல்லி போயிருக்கின்றனர். நத்தம் விஸ்வநாதன் தனியாக டெல்லி சென்றடைந்தார். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டிருந்தார். இப்படி தனித்தனியாக டெல்லி பயணம் செல்வது போல சென்ற அதிமுக தலைவர்கள் 5 பேரும் தங்கியிருந்தது ஒரே ஹோட்டலில்தான். அப்போதுதான் இந்த விஷயமே வெளியே தெரிந்தது.
ஜேபி நட்டா ஏற்க மறுப்பு: டெல்லியிலும் அமித்ஷாவை அதிமுகவின் இந்த தலைவர்கள் சந்திக்க முடியவில்லை. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து அண்ணாமலைக்கு எதிராக புகார் தெரிவித்தனர். ஆனால் ஜேபி நட்டா இதனை -ரசிக்காமல் அதிமுக தலைவர்களை திருப்பி அனுப்பிவிட்டார் என கூறப்படுகிறது.
மீண்டும் கூட்டணி இல்லை என அறிவிப்பு: இந்த கோபத்தில்தான் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லவே இல்லை என்கிற செப்டம்பர் 18-ந் தேதி நிலைப்பாட்டை மீண்டும் அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார். அப்போதும் கூட டெல்லி பயணம் தொடர்பான கேள்விகளுக்கு ஜெயக்குமார் ரொம்பவும் மழுப்பலான பதிலையே கொடுத்திருந்தார். தமிழ்நாட்டு நலன் சார்ந்த பிரச்சனைகளைப் பேசத்தான் டெல்லி சென்றதாக ஜெயக்குமார் கூறியிருந்தார். ஆனால் ஜேபி நட்டாவிடம் எதற்காக அப்படியான ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்பதற்கு ஜெயக்குமாரிடம் பதில் இல்லாமல் போனது.












Click it and Unblock the Notifications