மோடி அரசை பகைத்துக்கொண்டோமே.. அன்வர் ராஜா பேச்சால் அதிமுகவில் சலசலப்பு
Recommended Video
சென்னை: அதிமுக எம்பி அன்வர்ராஜா, மத்திய அரசுக்கு எதிராக, லோக்சபாவில் முத்தலாக் சட்ட மசோதா மீது உரையாற்றிய விதம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்தலாக் சட்ட மசோதா மீதான விவாதம் நேற்றுமுன்தினம் லோக்சபாவில் நடைபெற்றது. அதில், பல்வேறு கட்சி உறுப்பினர்களும் உரையாற்றினர்.
அதிமுக சார்பில் பேசிய அன்வர்ராஜா எம்பி, மத்திய அரசுக்கு எதிராக கடுமையான காட்டமான கருத்துக்களை எடுத்து முன் வைத்தார். முத்தலாக் சட்ட மசோதா என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அன்வர்ராஜா ஆவேசமாக பேசினார்.
அன்வர் ராஜா ஆவேசம்
இதற்கெல்லாம் உச்சம் வைத்தது போல, பாஜக மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்தது. கெடுவான் கேடு நினைப்பான் என்பது உங்களுக்குத் தான் சரியாக இருக்கும். நீங்கள் இறைவனுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது என்றெல்லாம் மத்திய அரசுக்கு சாபம் எடுப்பது போல பேசிவிட்டு அமர்ந்தார் அன்வர் ராஜா.
பாஜக தலைவர்கள் அதிர்ச்சி
மத்திய அரசுக்கு எதிராக அதிமுக எம்பி ஒருவரின் இத்தகைய பேச்சு, பாஜக தலைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோழமைக் கட்சியான அதிமுக மற்ற கட்சிகளை ஆவேசமாக முத்தலாக் விவகாரத்தில் நடந்து கொண்டது அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. லோக்சபாவில் முத்தலாக் சட்டம் நிறைவேறியபோது, அதிமுக, காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தது.
காட்டமான கருத்துக்கள்
இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது என்பதை காட்டுவதற்காக வெளிநடப்பு செய்ததை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் மத்திய அரசுக்கு எதிராக இவ்வளவு காட்டமான கருத்துக்களை அதிமுக எம்பி முன்வைக்க வேண்டியதில்லை என்று பாஜக தலைவர்கள் முணுமுணுக்கிறார்கள். அதிமுகவிலும் கூட இது குறித்த சலசலப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளாட்சி தேர்தல்
லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாஜகவை பகைத்துக் கொள்வது நல்லது இல்லை என்று அதிமுகவில் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு தள்ளிப்போட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது . பெரும்பான்மை பலம் இன்றி, ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசை பகைத்துக் கொள்வது மிகப்பெரிய பிரச்சனைகளில் கொண்டு சென்றுவிடும் என்று அதிமுகவில் சில தலைவர்கள் கூறியுள்ளனர்.
கூல் முயற்சி
இதனிடையே டெல்லியில் அதிமுக எம்பி வேணுகோபாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது அன்வர்ராஜா பேசியது அவரது சொந்த கருத்து அதிமுகவின் கருத்து கிடையாது என்பது போன்ற தகவல்களை தலைவர்களிடம் கொண்டு சென்று சேர்க்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்வர் ராஜாவிற்கு அதிமுகவிற்குள் சிக்கல் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.