சென்னையில் சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கிய அதிமுகவினர்! வன்முறை வெறியாட்டத்தால் மக்கள் அச்சம்!
சென்னை: சென்னையில் சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கும் வகையில் அதிமுகவினர் செய்த அராஜகத்தால் ராயப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
Recommended Video
ராயப்பேட்டை பகுதியில் நிகழ்ந்த கலவரத்தால் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பணிக்கு செல்ல முடியாமல் நூற்றுக்கணக்கானோர் அல்லல் பட்டு வருகின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வருவதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எதிர்த்ததால் அங்கு கலவரம் மூண்டது.

மக்கள் நிம்மதியிழப்பு
அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டை பகுதியில் வரலாறு காணாத வன்முறை வெடித்ததால், அவ்வழியாக சென்றவர்களும், அப்பகுதி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று வேலைக்கு செல்பவர்கள் பலரும் அதிமுகவினரின் கல் வீச்சு தாக்குதால் வந்த வழியிலேயே யு டர்ன் அடித்து வீடுகளுக்கு திரும்பினர். தமிழகத்தின் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திகழ வேண்டிய அதிமுக, தனது பொறுப்பற்ற செயல்பாடுகளால் சென்னை மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

ஊருக்கு ஒதுக்குப்புறம்
அதிமுக பொதுக்குழுவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வானகரத்தில் நடத்தினாலும் கூட அதன் தாக்கம் ஒட்டுமொத்த சென்னையிலும் எதிரொலிக்கிறது. ஆம், பசுமை வழிச்சாலையில் இருந்து எடப்பாடி பழனிசாமி வானகரம் சென்றடையும் வரை சுமார் இரண்டு மணி நேரம் காலை வேலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 7.30 க்கு செல்ல வேண்டிய ஸ்கூல் வேன் 8.45 மணிக்கு சென்ற காட்சிகளை எல்லாம் சென்னையில் காண முடிந்தது.

காலையில் திண்டாட்டம்
அதிமுகவினர் செய்த கேலிக்கூத்தால் ராயப்பேட்டை பகுதி மக்கள் திண்டாடிவிட்டனர். கொஞ்சம் அசந்திருந்தால் ஓ.பன்னீர்செல்வம் மண்டை பதம் பார்க்கப்பட்டிருக்கும். அந்தளவுக்கு ஆக்ரோஷமாக அவரை கட்சி அலுவலகத்திற்கு வர எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கல் வீச்சில் ஈடுபட்டனர். இந்த சம்பத்தால் பொதுமக்கள் தலையில் அடித்துக் கொண்டு கலவரக்காரர்களிடம் இருந்து தப்பியோடினர்.

போலீஸ் பாதுகாப்பு
அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் கலவரம் வெடித்த பிறகு அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இதனை சற்று முன்னதாகவே செய்திருந்தால் மக்கள் ஓரளவு நிம்மதியாக தங்கள் பணிகளை செய்திருக்கலாம்.












Click it and Unblock the Notifications