அதிமுகவில் பூகம்பம்.. பாஜக உடனான கூட்டணியால் கட்சியை விட்டு விலகிய புதுக்கோட்டை நிர்வாகி!
சென்னை: புதுக்கோட்டை அதிமுக நிர்வாகி முகமது கனி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக உடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகி உள்ளார் அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஆலங்குடி நகர செயலாளர் முகமது கனி.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகையின் போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவி மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது.

அதிமுக - பாஜக கூட்டணி
அதன் பின்னர், எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதிமுக பாஜக இடையே கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கூட்டணி தொடர்ந்து வந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தக் கூட்டணி முறிந்தது. அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை சீண்டி வந்ததால் அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து பாஜக உடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
கூட்டணி முடிவு
2024 லோக்சபா தேர்தலில் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவும், பாஜகவும் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலையொட்டி மீண்டும் கூட்டணி உருவாகியுள்ளது. பாஜக தலைமை, அதிமுக உடன் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும் அதற்குச் சம்மதித்துள்ளார்.
அதிமுக நிர்வாகி விலகல்
பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதை கட்சி நிர்வாகிகள் பலரும் வரவேற்கவில்லை. இந்நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்ததைக் கண்டித்து, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஆலங்குடி நகர செயலாளர் முகமது கனி.
அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஆலங்குடி நகரச் செயலாளர் கே.எஸ்.முகமது கனி, அதிமுகவில் இருந்து விலகுவதாக மாவட்டச் செயலாளர் சி.விஜயபாஸ்கருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இது புதுக்கோட்டை அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி எடுத்த கூட்டணி தொடர்பான முடிவால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக உடனான கூட்டணிக்கு எதிராக அதிமுகவினர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கட்சியினர் அதிருப்தி
அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் இன்று பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், "பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதற்கு முன் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அதிமுகவுக்கு வேலை பார்க்க முடியாது என இஸ்லாமிய சகோதரர்கள் கூறினார்கள்.
இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம். அதிமுக என்றும் உங்களுடன் துணை நிற்கும். கூட்டணி வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இரட்டை இலைக்கு ஒட்டு போடுங்கள். தாமரைக்கு ஒட்டு போட கூட உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம்" எனப் பேசினார். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன், அவரது இந்தப் பேச்சை தவிர்க்குமாறு சைகை செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications