இப்போ இப்படி பேசலாமா? அதிமுக எம்எல்ஏவால் கடுகடுத்த அப்பாவு! உள்ளே புகுந்த துரைமுருகன்.. பரபரத்த அவை
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் பேசிய விஷயம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ஜுனன் பேச்சை கேட்டு சபாநாயகர் அப்பாவு கடுப்பான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அவையில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். நேற்று முதல்நாள் அவையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இன்று கேள்வி நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்து வந்தார்.

சேகர் பாபு
இந்த நிலையில் இன்று அவையில் அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், மருதமலை முருகன் கோவிலுக்கு கம்பி வட ஊர்தி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு மண் பரிசோதனை செய்யும் போது, அங்கே கம்பி வட ஊர்தி அமைக்க முடியாத நிலை உள்ளது. மண் வலிமையாக இல்லை என்பது தெரிந்தது. இதனால் அங்கு கம்பி வட ஊர்தி அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியாது என்று கூறினார்.

அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன்
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் எழுந்து கேள்வி கேட்க தொடங்கினார். ஆனால் அவர் கேள்வி கேட்காமல்.. மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவை வணங்கி, மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் சேலத்து சிங்கம் எடப்பாடியார் அவர்களையும், மாண்புமிகு அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை எதிர்கட்சித் தலைவர் தென்னகத்து சிங்கம் ஓ பன்னீர்செல்வத்தையும், எங்கள் மண்ணின் மைந்தன், எதிர்க்கட்சி கொறடா, கொங்கு சிங்கம், நான் மீண்டும் அவைக்கு வர காரணமாக இருந்த எஸ்பி வேலுமணிக்கும் நன்றி தெரிவித்து பேசுகிறேன்.. என்று அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் நீண்ட புகழாரம் பாடினார்.

அப்பாவு நிறுத்தினார்
இதை கேட்டு கடுப்பான அப்பாவு, அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் பேச்சை பாதியில் நிறுத்தி.. இது கேள்வி நேரம். இப்போது இப்படி புகழாரம் செய்யலாமா? மானியக்கோரிக்கையில் விவாதம் நடத்தும் போது நீங்கள் இதெல்லாம் சொல்லலாம். அதில் தவறு இல்லை. இப்போது கேள்வி மட்டும் கேளுங்களேன். ஏன் இப்படி பேசுகிறீர்கள்.. நேரம் செல்கிறதே என்று குறிப்பிட்டார்.

துரைமுருகன்
இதையடுத்து குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், எல்லோரும் தலைவர், துணை தலைவரை பாராட்டி நன்றி சொல்கிறார்கள். ஆனால் இப்போதுதான் ஒருவர் கொறடாவை பாராட்டி பேசுகிறார்கள். கொறடாவை யாரும் கண்டுகொள்வது இல்லை. அவராவது பேசிவிட்டு போகட்டுமே என்று சிரித்தபடி கூறினார். இதையடுத்து அப்பாவு, துரைமுருகனின் பதிலை கேட்டு அப்படியே வெடித்து சிரித்தார். அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்களும் துரைமுருகனின் பதிலை கேட்டு அதிர்ந்து சிரித்தனர்.












Click it and Unblock the Notifications