சட்டசபை அதிமுக குழு தலைவர் யார்? எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் கோஷ்டிகள் பகிரங்க மோதல்!
சென்னை: தமிழக சட்டசபை அதிமுக குழு தலைவர் யார் என்பதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகள் பகிரங்கமாக மோதிக் கொண்டதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Recommended Video
அதிமுகவில் தமது கை தான் ஓங்கி இருக்க வேண்டும் என்பதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் முஸ்தீபு காட்டுகின்றனர். முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இருந்தே இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
பகிரங்க மோதல்
முதல்வர் வேட்பாளராக தம்மையே அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் முயற்சித்துப் பார்த்தார். ஆனால் ஈபிஎஸ் தரப்பு விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு பணிந்து போனது.
தென் தமிழகத்தில் அதிருப்தி
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் போது வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை முதல்வராக இருந்த ஈபிஎஸ் அறிவித்தார். இது தென்மாவட்டங்களில் தேவர் சமுதாயத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அத்துடன் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பும் எழுந்தது.
அதிமுக யார் கட்டுப்பாட்டில்?
தென் தமிழகத்தில் ஓபிஎஸ் அணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே ஈபிஎஸ் இப்படியான ஒருநடவடிக்கையை மேற்கொண்டார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஈபிஎஸ் அணி எதிர்பார்த்தது போல, ஓபிஎஸ் கோஷ்டியில் பலரும் தேர்தலில் தோல்வி அடைந்தனர். இதனை வைத்து அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஈபிஎஸ் அணி தீவிரம்காட்டுகிறது.
சட்டசபை அதிமுக குழு தலைவர் யார்?
சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு பகிரங்கமாக விமர்சனங்களை முன்வைத்தது. இதனால் 4 மணிநேரம் இந்த கூட்டம் நீடித்தது. ஆனாலும் சட்டசபை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்காமலேயே எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜெ. சமாதியில் கோஷ்டி முழக்கம்
மேலும் இரு கோஷ்டிகளும் ஜெயலலிதா சமாதிக்கு சென்றனர். அப்போதும் இரு கோஷ்டிகளின் ஆதரவாளர்களும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் திங்கள்கிழமையன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக யார் வசமாகப் போகிறது என்பதற்கு சுமூகமான முறையில் தீர்வு எட்டப்படுமா? என்பது சந்தேகம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.