எடப்பாடி பராக்.. ஆட்டத்தை தொடங்கும் அதிமுக! சென்னைக்கு திரும்பும் எம்எல்ஏக்கள்! அடுத்த மூவ் என்ன?
சென்னை: தமிழக அரசியலில் தவெக ஆட்சி அமைப்பது தொடர்பான பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது சென்னைக்கு திரும்பி வருவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தமிழக அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியாததால், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவை தவெக பெற்றிருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான உறுதியான எண்ணிக்கை இன்னும் கிடைக்கவில்லை. இந்த சூழலில், அதிமுகவும் அமைதியாக அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வந்தது.
குதிரை பேர அரசியல்
குறிப்பாக, புதியதாக தேர்வு செய்யப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 30-க்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம், எம்எல்ஏக்கள் "குதிரை பேர" அரசியலில் சிக்காமல் பாதுகாக்கப்படுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்தது.
நேற்று முன்தினம் இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென புதுச்சேரி சென்று, அங்கு தங்கி இருந்த எம்எல்ஏக்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அதிமுக அரசு
இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழல், தவெக ஆட்சியமைப்பதற்காக எடுக்கும் முயற்சிகள், திமுகவின் அரசியல் நகர்வுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், திமுக வெளியில் இருந்து அதிமுக அரசுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை திமுக அதிகாரப்பூர்வமாக மறுத்தாலும், அதிமுக தரப்பு மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து தற்போது எம்எல்ஏக்கள் சென்னைக்கு புறப்பட்டு வருவதால், கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவாரா? அல்லது எதிர்க்கட்சியாக செயல்படுவதாக அறிவிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, "தவெகவுக்கு எந்த சூழலிலும் ஆதரவு இல்லை" என்ற நிலைப்பாட்டை அதிமுக ஏற்கனவே தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சி
மற்றொரு பக்கம், தவெக ஆட்சிக்கு வந்தால் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அச்சம் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், எப்படியும் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுக மிக கவனமாக நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியல்
இதற்கிடையில், ஆளுநர் அர்லேகர் இன்னும் எந்த தரப்பையும் ஆட்சியமைக்க அதிகாரப்பூர்வமாக அழைக்காததால், தமிழக அரசியல் திரில்லர் நிலைக்குச் சென்றுள்ளது. இன்று நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மற்றும் அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவுகள் தான் அடுத்த அரசியல் அத்தியாயத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கிய அம்சமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications