வேலுமணி வீட்டில் அதிமுக எம்எல்ஏக்கள்.. போலீசாருடன் தொண்டர்கள் ரகளை.. "லைவ்" வீடியோ.. பரபரப்பு சூழல்
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் அங்கு அதிமுக தொண்டர்கள் குவிந்து போலீசாருக்கு எதிராக ரகளை செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் எஸ்பி வேலுமணியுடன் தொடர்புள்ள 53க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி மீது, மாநகராட்சி ஒப்பந்த பணிகள் உட்பட பல்வேறு பணிகளில் பல கோடி மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை
திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த ஊழல் புகார் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வேலுமணி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வேலுமணிக்கு எதிரான புகார் விசாரிக்கப்படும் என்று அரசு தரப்பில் நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாரெல்லாம் விசாரணை வளையத்தில்
எஸ்பி வேலுமணி தவிர மீதமுள்ள குற்றம்சாட்டப்பட்டவர்களான அன்பரசன், கேசிபி பொறியாளர்கள், கே.சந்திரபிரகாஷ், ஆர்.சந்திரசேகர், ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, தி ஏஸ்-டெக் மெஷினரி இந்தியா பிரைவேட் லிமிடெட், கான்ஸ்ட்ரோனிக்ஸ் இன்ஃப்ரா லிமிடெட், கான்ஸ்ட்ரோமால் குட் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலயம் ஃபவுண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், வைதுர்யா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலம் கோல்ட் & டைமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏஆர் இஎஸ் பிஇ இன்ப்ரா பிரைவேட் லிமிடெட், சிஆர் கட்டுமானத்தின் கு.ராஜன் மற்றும் பிற தெரியாத அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

காலை முதல் ரெய்டு
இந்த நிலையில்தான் இன்று காலை கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை தொடங்கினர். சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்கு தொடர்புள்ள 53 இடங்களுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

குவிந்த அதிமுக தொண்டர்கள்
திண்டுக்கல் சின்னக்காம்பட்டி புதூரில் எஸ்பி வேலுமணி உறவினர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல கோவை வடவள்ளி பகுதியில் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இவர், வேலுமணியுடன் நெருக்கமாக இருப்பவர். சோதனை நடைபெறும் நேரத்தில் எஸ்.பி.வேலுமணி, சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் இருக்கிறார். எனவே அங்கு வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை அறிந்ததும் சென்னையில் உள்ள அதிமுக தொண்டர்கள் எம்எல்ஏ விடுதிக்கு எதிரே குவிந்து அரசுக்கு எதிராக கோஷம் போட்டு வருகின்றனர். காவல்துறையினருடன் அதிமுக தொண்டர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்எல்ஏ விடுதிக்கு வந்த சிவி சண்முகம்
காவல்துறை மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. எம்எல்ஏ விடுதிக்கு முன்னாள், அமைச்சர்கள், சிவி சண்முகம் மற்றும் பெஞ்சமின் ஆகியோரும் வந்துள்ளனர். இந்த சமயத்தில் வேலுமணிக்கு ஆதரவாக நிற்பதற்கு தாங்கள் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அதிமுக நிர்வாகிகளும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளும் இங்கு வந்திருந்தபோது காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசார் அவர்களை உள்ளே விடவில்லை. நீண்ட நேரமாக வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் மற்றும் பெஞ்சமின் ஆகியோரை மட்டும் எம்எல்ஏ விடுதிக்குள் அனுமதித்தனர்.

சென்னையில் சட்டம் ஒழுங்கு
எம்எல்ஏக்கள் விடுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அங்கே நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக (லைவ்) பார்ப்பதற்காக காவல்துறையினர் இந்த இடத்தில் கேமரா மூலமாக கண்காணித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில்தான் தொடர்ந்து விசாரணை என்பது நடைபெற்று வருகிறது.

காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு
கோவையிலும் வேலுமணி வீட்டுக்கு எதிரே பெருவாரியான அதிமுக தொண்டர்கள் குவிந்து கோஷம் போட்டு வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகளை வைத்து அவர்களை அங்கிருந்து அகற்றினர். இதையடுத்து போலீசார் மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆடிட்டர் வீட்டில் ரெய்டு
இதேபோல, சென்னை அபிராமபுரத்தில் உள்ள வேலுமணியின் ஆடிட்டர் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்து வைத்திருப்பதாக வேலுமணி மீது புகார் எழுந்துள்ளதால், இது தொடர்பாக ஆடிட்டரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வேலுமணி அமைச்சராக இருந்தபோது தனக்கு நெருக்கமானவர்களுக்கு 811 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

பெரும் பரபரப்பு சூழ்நிலை
வேலுமணி வீட்டுக்கு எம்எல்ஏக்கள் வந்திருப்பது, சென்னை எம்எல்ஏக்கள் விடுதிகள் வேலுமணியிடம் 3 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருப்பது மற்றும் அவரை பார்க்க முன்னாள் அமைச்சர்கள் வந்திருப்பது.. இன்னொருபக்கம் கோவை மற்றும் சென்னையில் அதிமுக தொண்டர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கியிருப்பது ஆகியவற்றால் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications