அதென்ன அதிமுக எம்.எல்.ஏக்கள் கையில்..? சட்டசபைக்கு இன்று கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
சென்னை: தமிழக சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் இன்று தங்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று (அக்டோபர் 14) காலை 9.30 மணிக்கு கூடியது. வரும் 17ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. நேற்று காலை கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து முன்னாள் கவர்னர் கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று மீண்டும் சட்டசபை கூடி உள்ளது. இன்று கூடுதல் மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதம், நாளை வரை நடக்கும். விவாதத்திற்கு, 17 ஆம் தேதி பதில் அளிக்கப்படும். அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் துயர சம்பவம், கிட்னி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை, சட்டசபையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம், கிட்னி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர். இன்று காலை தமிழக சட்டப்பேரவைக் கூடியவுடன் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தை தொடர்ந்து, 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications