’எண்ட் கேம்’ ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! அவசரமாக தூது விட்ட ஓபிஎஸ்! சிக்னல் கொடுப்பாரா சின்னம்மா?
சென்னை : அதிமுகவில் தற்போதைக்கு எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தற்காலிக தடை பெற்றுள்ள ஓ பன்னீர்செல்வம் அடுத்ததாக சசிகலாவை சந்திக்க தீவிரம் காட்டி வருவதாகவும் ஆனால் அது குறித்த சிக்னல் கிடைக்கவில்லை என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள்.
பொதுக்குழு நீதிமன்ற வழக்கு, சசிகலாவின் புரட்சி பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா சந்திப்பு நிகழ்சியானது தாமதமாகிக் கொண்டே போன நிலையில் தற்போது விரைவில் அவர்கள் சந்திப்பது உறுதியாகி இருக்கிறது என பல நாட்களாக சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால், இவ்வளவு விவகாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் அது எப்போது நடக்குமென்பது குறித்து உறுதியான அறிவிப்புகளோ, ஏற்பாடுகளோ நடைபெறவில்லை என ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளே புலம்பி வருகிறார்களாம்.

அதிமுக பொதுக்குழு
இதனிடையே கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்த நிகழ்விலிருந்தே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எண்ணிக்கை வெகுவாகச் சரிந்துள்ளது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும், எடப்பாடி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இடைக்கால தடை
அந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்ஆர் ஷா, கிருஷ்ணா முராரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தனர். மேலும் அதிமுகவில் இருவரும் தலைவராக தொடர முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடியும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சற்றே ஏமாற்றம்
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சற்றே ஏமாற்றம் அடைந்துள்ளது உண்மை தான் என்றாலும், அதனை அவ்வளவாக வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. தற்போதைய சூழலில் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரை அமைதிக்காக முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதற்குப் பிறகாக இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என ஏற்கனவே முடிவெடுத்திருந்தது. தற்போது தீர்ப்பிலும் அதே கருத்து தான் கூறப்பட்டிருக்கும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் உற்சாகம் அடைவதற்கு ஒன்றும் இல்லை எனக் கூறி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி உறுதி
எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததற்கு பிறகு ஓபிஎஸ் முற்றிலும் ஓரங்கட்டப்படுவது உறுதி என்றும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்றும் கூறுகின்றனர். அதே நேரத்தில் கிடைத்திருக்கும் இந்த சிறிய கால இடைவெளியை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. தற்போதைய சூழலில் சசிகலாவின் சந்திப்பு நிகழ்ந்தால் நிச்சயம் எடப்பாடி தரப்பில் இருக்கும் சில முன்னால் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் தங்களுக்கு ஆதரவு தருபவர்கள் என எதிர்பார்க்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

சிக்னல் தருவாரா சின்னம்மா?
ஏற்கனவே பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தபோது பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுடன் இருந்தவர்களை நிச்சயம் சந்திப்பேன் எனக் கூறியிருந்தார். இது சசிகலாவுக்கு வெளிப்படையாகவே விடுக்கப்பட்ட அழைப்பாகவே கருதப்பட்டது ஆனாலும் தொண்டர்களை நிச்சயம் இணைப்பேன் எனக் கூறிவரும் சசிகலா தற்போது வரை ஓ பன்னீர்செல்வம் தரப்பை சந்தித்து பேசுவேன் என்பது குறித்து உறுதியான தகவல்களை எதையும் தெரிவிக்காமல் இருக்கிறார். இதனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு சற்று பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் எப்படியாவது சசிகலாவை சந்தித்து தங்களது ஆதரவு வட்டத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் அது எப்போது நடக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.












Click it and Unblock the Notifications