அதிமுகவால் ராஜ்யசபாவில் நிறைவேறிய சி.ஏ.ஏ... சட்டசபையிலும் வக்காலத்து- இன்று அதே அதிமுக எதிர்க்கிறது!
சென்னை: மத்திய பாஜக அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் (சி.ஏ.ஏ) ராஜ்யசபாவில் நிறைவேற காரணமாக இருந்தது அதிமுகதான். சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வால் யார் பாதிக்கப்பட்டார்கள் என ஆவேசமாக கேட்டு கொந்தளித்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். ஆனால் இன்று அதே அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சி.ஏ.ஏ.வை கைவிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது இந்த சட்டம். இந்த நாடுகளில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோர் மட்டும் இந்திய குடியுரிமை கோரி எந்த ஆவணங்களும் இல்லாமலேயே விண்ணப்பிக்க முடியும். அதாவது இஸ்லாமியர்கள் தவிர்த்த இதர மதத்தினர் மட்டும் இந்திய குடியுரிமை பெற முடியும்.
மேலும் அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பின் போது சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களில் இஸ்லாமியர் தவிர்த்து எஞ்சியவர்களும் இந்திய குடியுரிமையை மீண்டும் பெறலாம் என்கிறது இந்த குடியுரிமை சட்ட திருத்தம்.. அப்பட்டமாக மதத்தை முன்வைத்து குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து பெரும் போராட்டங்கள் இடைவிடாமல் முன்னெடுக்கப்பட்டன.

தமிழகத்தில் போராட்டம்
தமிழ்நாட்டிலும் பட்டி தொட்டி எங்கும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. கொரோனா பரவல் காரணமாக இந்த போராட்டங்கள் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டன.

அதிமுகவால் நிறைவேற்றம்
ராஜ்யசபாவில் இந்த சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் நிறைவேறி இருக்காது. அதிமுக ஆதரவால்தான் சி.ஏ.ஏ. மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது. இதனை சுட்டிக்காட்டிதான் தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

சி.ஏ.ஏ.வுக்கு முதல்வர் ஆதரவு
இதனையே சட்டசபையிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிக ஆவேசமாக, சி.ஏ.ஏ.வால் தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டாங்க? அதை நீங்க சொன்னால்தான் தீர்வு காண முடியும் என கொந்தளித்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கை
இப்போது அதே சி.ஏ.ஏ. சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 80-வது வாக்குறுதியாக, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications