ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த அ.தி.மு.க.. மூன்று முக்கிய சர்ச்சைகளுக்கு எண்ட் கார்டு..அடுத்தது என்ன?
சென்னை: கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்த அதிமுக கிட்டத்தட்ட அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதிமுகவை பொறுத்தவரை மிகவும் சுபமாக அமைந்தது.
'அ.தி.மு.க.வும், சர்ச்சையும்'.. இந்த வார்த்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகே அதிமுகவை துரத்திக்,கொண்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
முதல் பிரச்சினையை பெங்களூரு ஜெயிலில் இருந்து விடுதலையான சசிகலா கிளப்பினார். பெங்களுருவில் இருந்து சென்னை வந்த அவர் காட்டிய ஆட்டம், எடப்பாடி பழனிசாமியை அதிர வைத்தது. தொடர்ந்து பீதியை கிளம்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார்.
துளிர்விட்ட பிரச்சினை
இதற்கிடையே யார் முதல்வர் வேட்பாளர் ? என்ற போட்டி ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இடையே எழுந்து விட அதற்கும் உடனடியாக விடை கொடுத்து சுபமாக முடிக்கப்பட்டது. பின்பு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்த தோல்வியுடன் அமைதியாக இருந்த பிரச்சினைகள் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தன.
ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் போட்டி
தேர்தலுக்கு முன்பாக எழுந்த யார் முதல்வர் வேட்பாளர்? என்ற போட்டி தேர்தலுக்கு பிறகு யார் எதிர்க்கட்சி தலைவர்? என்ற போட்டியாக மாறியது. கொங்கு மண்டலத்தில் இத்தனை தொகுதிகள் பெற நான்தான் காரணம் ? என்று இ.பி.எஸ்.சும், ஏற்கனவே முதல்வர் பதவியை விட்டு கொடுத்துள்ளேன் என்று ஓ.பி.எஸ்.சும் போட்டி போட்டனர்.
மீண்டும் பரபரப்பு
கடைசியில் ஓ.பி.எஸ்.க்கு சம்மதம் இல்லாவிட்டிலும் இந்த முறையும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஓ.பி.எஸ் ஏற்க மறுத்தது, திமுக அரசை பாராட்டி ஓ.பி.எஸ்.சும், திமுக அரசை எதிர்த்து இ.பி.எஸ்.சும் என தனித்தனியாக அறிக்கை விட்டதால் மீண்டும் அதிமுக பரபரத்தது.
பீதியை கிளப்பிய சசிகலா
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் மீண்டும் அரசியலில் நுழைய ஆயத்தமானார் சசிகலா. வெப் சீரிஸ் போல் அதிமுக தொண்டர்களுடன் அவர் பேசும் வீடியோ தொடர்ச்சியாக வெளிவந்தது. கிட்டத்தட்ட அதிமுகவை கைப்பற்றுவதுபோல் சசிகலா ஒவ்வொரு வீடியோவிலும் பேசியதால் அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது.
திமுக பக்கம் செய்யும் பாமக
இது போக அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக, திமுக அரசை தொடர்ந்து பாராட்டி தள்ளியது. பாமக நிறுவனர் ராமதாஸ் தொடந்து திமுக அரசை பாராட்டி ட்வீட் போட்டு வந்தார். அன்புமணி ராமதாசும் திமுக அரசை பாராட்டியதுடன், ஒரு சில இடங்களில் அதிமுகவை விமர்ச்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாமக-அதிமுக கூட்டணியில் விரிசல் உருவான சூழ்நிலையில் முன்னாள் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அன்புமணி ராமதாஸை போட்டு விளாசியது சர்ச்சையை கூட்டியது.
முற்றுப்புள்ளி வைப்பு
இந்த மூன்று முக்கிய பிரச்சினைக்கும் எப்படி முற்றுப்புள்ளி வைப்பது? என்று அதிமுக தீவிரமாக யோசித்தது. ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்த ஓ.பி.எஸ்.சை ஓட்டலுக்கு சென்று சமாதானம் செய்தார் இ.பி.எஸ். ''சசிகலா உள்ளே வந்து விட்டால் நமக்கு இடம் இருக்காது. கட்சியும் சிதறி விடும்'' என்று சமாதான வார்த்தைகளை கூறி ஓ.பி.எஸ்.சை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பெற சம்மதிக்க வைத்தார் இ.பி.எஸ்.
மோதல் முடிவு
இந்த முடிவின்படிதான் சசிகலாவுடன் போனில் பேசிய அதிமுக உறுப்பினர்கள் 14 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர். சசிகலாவுடன் பேசினால் இந்த தண்டனைதான் கிடைக்கும் என்று அதிமுக எச்சரித்துள்ளதால் சசிகலாவுடன் தொடர்பு கொள்ள பலரும் தயங்குவார்கள். எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்றதன் மூலம் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இடையேயான மோதலும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளது. இருவரது ஆதரவாளர்களும் இனிமேல் கோஷ்டியாக பிரியாமல் சேர்ந்து செய்லபட வாய்ப்புள்ளது.
அடுத்த தேர்தலுக்கு குறி
இதுபோக அன்புமணியை விமர்சித்த புகழேந்தியை நீக்கியது மூலம் அதிமுக வெறுப்பில் இருந்த பாமகவுக்கும் சமாதானம் ஆகும்படியும் செய்து விட்டது அதிமுக. ஆளும் திமுக அரசு, அடுத்த சட்டசபை தேர்தலையும் மனதில் வைத்து திட்டங்கள் மூலம் மக்களை கவர்ந்து வரும் நிலையில், ஒன்றாக இருந்தால் தான் அடுத்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது.
இந்த நிலை நீடிக்குமா?
இதனை திட்டமிட்டே நேற்றைய கூட்டத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாமக, திமுக பக்கம் சாயாமல் இருக்கவும், பாமக, பாஜகவுடன் சேர்ந்து திமுக அரசின் திட்டத்தை விமர்ச்சிக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களின் முக்கிய பிரச்னைகளில் எதிர்க்கட்சியாக ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொண்டர்கள் கோஷ்டியாக பிரியக்கூடும் என்பதால் தனித்தனியாக அறிக்கை வெளியிடாமல் இனிமேல் முக்கிய பிரச்சினையில் இருவரும் சேர்ந்த அறிக்கை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தொண்டர்களை அலைபாயாமல் பாதுகாக்க முடியும் என்று அதிமுக தெளிவாக நம்புகிறது. அதிமுகவில் தற்போது நீடிக்கும் சுமூக நிலை தொடர்ந்து நீடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.