எடப்பாடிக்கு எகிறுதே பிரஷர்! முதல் செங்கலை உருவிய செங்கோட்டையன்! தன் பங்குக்கு ஓட்டை போடும் ஓபிஎஸ்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் ஜெயலலிதா எம்ஜிஆர் படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கி இருக்கிறார் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன். இந்த நிலையில் தன் பங்குக்கு அறிக்கை விட்டுள்ளார் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வருமான ஓ.பன்னீர்செல்வம்.

அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தும் அதில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.

Edappadi palaniswami o panneerselvam sengottaiyan

இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர் விழா குழுவினரிடம் மேடையில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வைக்க வேண்டும் என கூறியும் அவர்கள் படங்கள் இல்லை என கூறினார்.

அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக நிதி உதவி வழங்கியதோடு, அதற்கு அடித்தளமாக இருந்த ஜெயலலிதாவின் படம் வைக்கப்படவில்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை என விளக்கமும் அளித்திருந்தார். இந்த நிலையில் செங்கோட்டையனின் பேச்சு புகைப்படங்கள் வைக்கப்படவில்லை என்பதற்கான அல்ல, எடப்பாடி பழனிச்சாமி மீதான கோபத்தின் வெளிப்பாடு தான் அது என்கின்றனர் அதிமுகவினர்.

இந்த நிலையில் தன் பங்குக்கு அறிக்கை விட்டுள்ளார் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வருமான ஓ.பன்னீர்செல்வம். அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை என கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ். அதில்,"அத்திக்கடவு அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பொதுப் பணித் துறை ஏரிகள், ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்பும் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு, தி.மு.க. அங்கம் வகித்த அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக செயல்படுத்திட ஆணையிட்டவர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்கான குரல் 1957 ஆம் ஆண்டு முதல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தாலும், இந்தத் திட்டத்திற்கு விதை போட்ட பெருமை மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களையே சாரும். மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் அத்திக்கடவு - அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

மேலும், 07-08-2015 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தபோது, தமிழ்நாடு தொடர்பான திட்டங்கள் குறித்த அறிக்கையினை மாண்புமிகு அம்மா அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் வழங்கினார்கள். இந்த அறிக்கையில், 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு -அவினாசித் திட்டத்திற்கு நிதி உதவி கோரும் பொருளும் இடம் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, 16-02-2016 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், அத்திக்கடவு - அவினாசித் திட்டம் இடம்பெற்றிருந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, மத்திய அரசிற்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும் என்றும், அதே சமயத்தில் இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றை, நிதி அமைச்சர் என்ற முறையில் பேரவையில் வாசிக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இதனைத் தொடர்ந்து, 18-02-2016 நாளிட்ட பொதுப் பணித் துறை அரசாணை எண் 66 மூலம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், மூன்று கோடியே 27 இலட்சம் ரூபாய் நிதியை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலையொட்டி சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்ட மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்கள்.

மாண்புமிகு அம்மா அவர்களின் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் காரணமாக, மாண்புமிகு அம்மா அவர்களின் ஆளுமை காரணமாக, மாண்புமிகு அம்மா அவர்களின் பன்மொழித் திறன் காரணமாக, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு அம்மா அவர்களின் பாதையில் நடைபெற்ற ஆட்சி, மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு - அவினாசித் திட்டத்தை நிறைவேற்றியது. மாண்புமிகு அம்மா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த நிலையில், 2017 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சி. மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு நனவாக்கப்பட்டது அவ்வளவுதான். இன்றைக்கு, அத்திக்கடவு - அவினாசித் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால் " அதற்கு முழு முதற் காரணம் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+