என்னது பாஜகவுக்கு 25 தொகுதிகளை விட்டுத் தரனுமா? அமித்ஷா அறிவிப்பால் அதிர்ச்சியில் உறைந்த அதிமுக!
சென்னை: தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பாஜக வெல்வதை இலக்காக வைத்துள்ளோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது அதிமுக வட்டாரங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பாஜக மேலிடம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஒவ்வொரு மாநிலமாக சென்று லோக்சபா தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திராவில் அமித்ஷா சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு நேற்று இரவு வருகை தந்தார் அமித்ஷா. அவர் வருகையின் போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் அமித்ஷாவை பல்வேறு பிரமுகர்கள் சந்தித்து பேசினர். இச்சந்திப்பைத் தொடர்ந்து தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக- பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பது எதுவும் நடைபெறவில்லை. ஆனால் பாஜகவோ, நீலகிரி- தென்சென்னை-வேலூர் என சில தொகுதிகளை டார்கெட் செய்து களப்பணிகளை மேற்கொள்கிறது. இதனை தொடக்கம் முதலே அதிமுக சகிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் இன்று பேட்டியளித்த அமித்ஷா, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெல்வதுதான் இலக்கு என அதிரடியாக கூறினார். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகளை கேட்போம் என இதற்கு முன்னர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
அதேபோல டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி தலைமையிலான அதிமுக குழு சந்தித்த போதும் இதேபோல 25 தொகுதிகளை நேரடியாகவே கேட்டார் எனவும் சொல்லப்பட்டது. அப்போதே அதிமுகவினர் இதெல்லாம் எப்படி சாத்தியம் என அதிர்ச்சியுடன் கேள்வி கேட்டனர். ஏனெனில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அதிகபட்சம் அதிமுகவானது 5 தொகுதிகளைத்தான் ஒதுக்கக் கூடிய நிலை உள்ளது.
ஆனால் டெல்லியில் ஆளுகிற கட்சி என்ற ஒரே காரணத்துக்காக அதிமுகவிடம் இருந்து 25 தொகுதிகளை பாஜக பறிக்க நினைக்கிறது. இதனைத்தான் அன்று அண்ணாமலையும் இன்று அமித்ஷாவும் உறுதிப்படுத்தி உள்ளனர். இது அதிமுகவினரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அமித்ஷாவின் இந்த பகிரங்க அறிவிப்பு, அண்ணா திமுகவுக்கான வெளிப்படையான நெருக்கடியாகவும் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜகவுக்கு மட்டும் 25 தொகுதிகளை கொடுத்து கூட்டணி கட்சிகளுக்கும் சிலவற்றை கொடுத்துவிட்டு சொற்ப தொகுதிகளில் அதிமுக போட்டியிட ஒப்புக் கொள்ளுமா? என்பதெல்லாம் பெரும் கேள்வி. அதுவும் அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர் என ஒற்றைத் தலைமை உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் பாஜகவுக்கு 25 தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி விட்டுத்தரமாட்டார் என ஆணித்தரமாக நம்புகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications