நடுரோட்டில் உடைந்த அதிமுக.. எடப்பாடி வீட்டு கிட்டயே அந்த சம்பவம்.. இனி இரட்டை இலை யாருக்கு போகும்
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவருடைய சொந்த கட்சி எம்எல்ஏக்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்து அதிமுகவை இரண்டாக உடைத்துள்ளனர்.. இது மட்டுமல்ல, எடப்பாடியின் சொந்த ஊரான சேலத்திலேயே "பதவி விலகு" என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா? சேலத்தில் என்ன நடக்கிறது? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அதிமுகவில் பெரும் பிளவு வெளிப்படையாகி உள்ளது.

சபாநாயகரிடம் இரு தரப்பு மனு
சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் 25 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.. இதனால் கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி, வாக்களித்த எம்எல்ஏக்களின் கட்சி பதவியை உடனடியாக பறித்தார்..
எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்களான தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து, தவெகவுக்கு வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களை கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளித்தனர்.. சிவி சண்முகம் தரப்பினரோ தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும், தங்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி தனியே மனு அளித்தனர்..
ஆளுநர் மாளிகையிலும் புகார்
இதனிடையே, எடப்பாடி தரப்பினர் ஆளுநர் மாளிகையிலும் புகார் மனு அளித்தனர்.. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் கட்சி கொறடா உத்தரவை மீறி நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.. இந்த நிலையில், அதிமுக பிளவு இனி எந்தத் திசையில் செல்லும், சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது..
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்
இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடியின் சொந்த ஊரான சேலத்திலேயே அவருக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.. கொண்டலாம்பட்டி பகுதி ஜெபேரவை முன்னாள் செயலாளர் ஜினோத்குமார் சம்பத் பெயரில் வெளியிடப்பட்ட அந்த போஸ்டரில், "புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டு, அம்மாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தை அடகு வைக்க துணிந்த பொதுச்செயலாளரே பதவி விலகு" என்று நேரடியாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..
அதுவும், எடப்பாடி செல்லும் பாதையிலேயே பல இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.. இதை கண்ட அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அந்த போஸ்டர்களை கிழித்தெறிந்து வருகிறார்கள்.
இனி அடுத்து என்ன நடக்கும்?
சபாநாயகர் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறார் என்பதுதான் அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.. 25 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் ஆனால் எடப்பாடி பலமடைவார்.. மாறாக சண்முகம் தரப்பு சட்டரீதியாக "உண்மையான அதிமுக" என்று அங்கீகரிக்கப்பட்டால், கட்சியின் கொடி, சின்னம் அனைத்தும் பறிபோகும் ஆபத்து எடப்பாடிக்கு நேரும்.. ஆளுணர் எந்த தரப்பு மனுவை ஏற்கிறார் என்பதும் முக்கியமான திருப்புமுனையாகும்.. நீதிமன்றங்களும் களத்தில் இறங்கும் வாய்ப்பு அதிகம்..
எனினும், இந்த பிளவு நீண்டகாலத்தில் இரு தரப்புக்கும் நஷ்டம்தான் என்கிறார்கள்.. ஒன்றுபட்ட அதிமுகவுக்கே திமுகவை எதிர்க்கும் பலம் இருந்தது, உடைந்த நிலையில் இரு குழுக்களும் அரசியல் சக்தியை இழக்கும்.. இதன் மிகப்பெரிய பயனாளி திமுக மட்டுமே ஆவார்கள் என்பதில் சந்தேகமில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications