ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு.. நாகரீகமற்ற விமர்சனம்.. வன்மையாக கண்டித்த துரை வைகோ!
தென்காசி: ராஜாஜியும் அண்ணாவும் அமர்ந்திருந்த முதலமைச்சர் நாற்காலியில் இன்று நா*ரி முதலமைச்சர் அமர்ந்திருக்கிறார் என்ற சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த ஆ.ராசாவை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கண்டித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆ.ராசாவின் பேச்சு நாகரீகமற்ற பேச்சு என்றும் சாடியுள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி மதிவாணனின் திருமண நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், காமராஜரை தோற்கடித்த பெ.சீனிவாசன் ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் அண்ணாவும், ராஜாஜியும் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு ஒரு தலைவரை ஒரு தேர்தலில் வைத்து எடை போடவில்லை. காமராஜரை வீழ்த்தியதை நினைத்து இருவருமே சோகம் அடைந்தனர்.

அண்ணாவும், ராஜாஜியும் இருந்த சட்டசபையில் ஒரு நா*ரி தலைவரை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். அதேபோல் இன்னொரு கட்சித் தலைவர் பொதுக்குழு கூட்டி சொல்கிறாராம்.. அந்த தலைவர் சென்றால் அப்படியே ஒரு லட்சம் பேர் நிற்பார்களாம். மொத்த கட்சியும் கலைஞர் கோட்டம் கொள்ளாது என்று ஆவேசமாக சாடினார்.
கடந்த சில நாட்களாகவே திமுகவை மதிமுக மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் சாடி வந்த நிலையில், திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் மதிமுக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்த போது, முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் எம்.பி. ஆ. ராசா முதல்வர் ஜோசப் விஜய் குறித்து ராஜாஜியும் அண்ணாவும் அமர்ந்திருந்த முதலமைச்சர் நாற்காலியில் இன்று நா*ரி முதலமைச்சராக அமர்ந்திருக்கிறார் என்ற சர்ச்சைக்குரிய விமர்சனம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு துரை வைகோ, இது விரிவாக்கமாக பேசக்கூடிய ஒன்று.. ஆ.ராசாவின் பேச்சு நாகரீகமற்றது. அரசியல் எல்லைகளைக் கடந்து வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார். இதனிடையே மதிமுக உயர்நிலைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications