அதிமுக செய்த வரலாற்றுப் பிழை.. கூட்டணியை மறுபரிசீலனை செய்யணும்.. எடப்பாடிக்கு திருமாவளவன் கோரிக்கை!
சென்னை: "பாஜகவின் வாக்கு வங்கியை வலுப்படுத்த அதிமுக துணை போவது வரலாற்றுப் பிழை.. தமிழர் நலன், தமிழ்நாட்டு நலன், மற்றும் சமூக நீதி அரசியலைப் பாதுகாக்க, பாஜக உடனான கூட்டணியை அதிமுக அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என விசிக திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக ஏற்கனவே உள்ள கூட்டணியை தொடர இருப்பதாகத் தெரிகிறது. கடந்த தேர்தல்களில் பெற்ற வெற்றி அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளன. விஜய் தலைமையிலான தவெக கூட்டணியை இன்னும் உறுதி செய்யவில்லை. நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்துப் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார்.

திருமாவளவன் பேட்டி
இநிந்லையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், "பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்கபரிவார் சக்திகள் தமிழகத்தில் அரசியல் சக்தியாக வளர்வதற்கு பகீரத முயற்சி செய்கின்றன. தமிழ்நாட்டில் நிலைகொண்டு உள்ள பெரியார் இயக்கங்களை சமூகநீதி அரசியலை நீர்த்து போகச் செய்வதில் குறியாக இருக்கிறார்கள். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்றை பலவீனப்படுத்தி தமிழ்நாட்டில் கால் ஊன்ற நினைக்கின்றனர். பின்னர் மற்றொரு திராவிடக் கட்சியையும் அழித்தொழிக்க நினைக்கின்றனர்.
அதிமுக வரலாற்றுப் பிழை செய்துள்ளது
திமுக, அதிமுகவை வலுவிலக்கச் செய்ய வேண்டும் என்பதை தாண்டி தமிழ்நாட்டில் நிலவும் சமூக நீதியை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் உண்மையான நோக்கம். ஆனால் இதையெல்லாம் அறிந்தும் கூட அதிமுக வரலாற்று பிழையைச் செய்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து படுதோல்வி அடைந்தது. எனினும் மீண்டும் படுதோல்வி கிடைக்கும் என்பதை உணராமல் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இது அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்பதை எல்லாம் தாண்டி, பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க துணை போவது என்பது வரலாற்றுப் பிழை. அதிமுக மீண்டும் வரலாற்று பிழையைச் செய்திருக்கிறது. தமிழர் நலன் கருதி, சமூகநீதி அரசியலை பாதுகாப்பதை உணர்ந்து, பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு வரவேற்பு
அதைத்தொடர்ந்து, நேற்று முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சவால் விட்டுப் பேசியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், "டெல்லி ஆளுமைக்கு எப்போதும் தமிழ்நாடு அவுட் ஆப் கன்ட்ரோல் தான் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்தை முழுமையாக வரவேற்கிறோம்." என்றார்.
ஆளுநர் - குடியரசுத் துணைத் தலைவர்
மேலும் பேசிய அவர், "குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இருவரும் சந்தித்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இருவருமே ஆர்எஸ்எஸ் பயிற்சி பாசறையில் இருந்து வந்தவர்கள். ஒரே கருத்து கொண்டவர்கள். இந்த சந்திப்பு ஒன்றும் அதிர்ச்சிக்குரிய விஷயம் அல்ல. குடியரசு துணைத் தலைவர் கருத்தை உச்ச நீதிமன்றத்தை விமர்சிப்பது என்பதாக மட்டுமே பார்க்க முடியாது. பாஜக நினைப்பது போல் தீர்ப்பை எழுதி கொள்ளலாம் என கருதுகிறார்கள்.
ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டனர். அது உண்மையான நீதி தானா? என சிந்தித்து பார்க்க வேண்டும். அரசியல் சாசன அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது வரவேற்க கூடியதாகும். குடியரசு துணை தலைவர் கருத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான கருத்து மட்டும் அல்ல அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்தும் ஆகும். இது வன்மையாக கண்டிக்கதக்கது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications