ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா? புறக்கணிப்பா? ஜன.11-ல் ஆலோசனை!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்குமா? என்பது குறித்து வரும் 11-ந் தேதி அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை ஏற்கனவே புறக்கணித்து அதிமுக கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக எடுக்க இருக்கும் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 10-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்க இருக்கிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் 2021-ம் ஆண்டு போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா காலமானார். இதனையடுத்து நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட்டது. திருமகன் ஈவெராவின் தந்தை மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வானார். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த ஆண்டு இறுதியில் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுகவை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என தெரிகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத், வேட்பாளராக அறிவிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.. திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கி இருந்தது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசனை நடத்த அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்ததால் ஏற்பட்ட பாதிப்புகள், விமர்சனங்கள் குறித்து விவாதிக்கப்படும்; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் மற்றும் புறக்கணிப்பதால் உருவாகும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து விவாதித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.











Click it and Unblock the Notifications