பாஜக அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றும் அதிமுக.. முக்கிய தீர்மானங்களை தயாரித்த டீம்!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பாஜக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் திமுக கூட்டணி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதே கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கத் தயாராகி வருகிறது திமுக. அதேநேரம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்கத் தொடங்கியதில் இருந்து, கூட்டணிக்கு கட்சிகள் வருவதும், போவதுமாக இருந்து வருகின்றன. இதனால் அதிமுக கூட்டணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்தது.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இதற்காக கட்சியினரை உற்சாகப்படுத்தும் விதமாக, ஏற்கெனவே மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, அவர்களிடம் எழுச்சியுரையாற்றி, உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார்.
அதிமுக செயற்குழு கூட்டம்
அதேபோல், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அசைவ விருந்து வைத்து, அவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு ஆலோசனை வழங்கினார். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பின்னர், நடைபெறும் செயற்குழுக் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தீர்மானங்களை ரெடி செய்த டீம்
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களைத் தயாரிக்க, முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், வைகைச்செல்வன், டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவை பழனிசாமி அமைத்திருந்தார்.
இந்தக் குழுவினர் 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்களைத் தயாரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் பெரும்பாலான தீர்மானங்கள் திமுக ஆட்சிக்கு எதிராகவும், திமுகவைக் கண்டித்தும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக அரசை பாராட்டி தீர்மானங்கள்
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழகத்திற்கான 100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திய நிலையில் ரூ.2,999 கோடி ரூபாயை விடுவித்த மத்திய அரசை பாராட்டி தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல, அதிமுக மற்றும் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு தேச நலனுக்காக இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக துணை நிற்கும் என்றும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக நிர்வாகிகள் இடையே அதிருப்தி
இன்று மாலை நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநில கழகச் செயலாளர்கள், கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்தச் செயற்குழு கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டதை ஏற்காத நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கருத்து கேட்க இருப்பதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கான காரணத்தை அவர் விளக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications