வெள்ளை அறிக்கை... வரிசையாகக் குற்றஞ்சாட்டிய அமைச்சர் பிடிஆர்.. ஒற்றை ட்வீட்டில் கலாய்த்த அதிமுக
சென்னை: தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை விளக்கும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதனைக் கிண்டல் செய்யும் விதமாக அதிமுக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு பதவியேற்ற உடனேயே தமிழ்நாட்டின் நிதிநிலையை விளக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை சுமார் 11.00 மணியளவில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு நிதி நிலைமையை விளக்கும் வகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

வருவாய் குறைவு
கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் மாநிலத்திற்கு உபரி வருவாய் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால், இது கடந்த 2013க்கு பிறகு மாறியதாகவும், குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு வருவாய் பற்றாக்குறை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாநிலத்தின் வருவாய் சரிந்ததற்கு கொரோனா காரணமில்லை என்று குறிப்பிட்ட அவர், கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே வருவாய் மோசமான நிலையில் இருந்ததாக தெரிவித்தார்.

வரி
இந்த வருவாய் பற்றாக்குறை காரணமாகக் கடனை செலுத்தும் தன்மை குறைந்துவிட்டதாகத் தெரிவித்த அமைச்சர் பிடிஆர், இதனால் மாநிலத்தின் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசின் வருமானம் நான்கில் ஒருபங்கு குறைந்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், ஜீரோ வரி என்பது அர்த்தமற்ற ஒன்று என்று விமர்சித்த அவர், சரியான மக்களிடம் இருந்து சரியான வரியைப் பெறுவதன் மூலமே மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றார்.

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் வரி
நீண்ட கால பொருளாதார சரிவு காரணமாகத் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதிமுக அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூட கடன் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் சுமார் ரூ 2.63 லட்சம் வரை கடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
|
அதிமுக ட்வீட்
இப்படி அதிமுக அரசின் மீது வரிசையாக பல்வேறு குற்றச்சாட்டுகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுமத்தினார். இந்நிலையில், இந்த வெள்ளை அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது. அதில் சுந்தர்ராஜன் எதிரே வரும் நபரிடம் வெள்ளைக் காகிதத்தைக் கொடுப்பார். அதன் பின்னர் அவரே, 'அதுல ஒன்னுமில்ல கீழ போட்டுரு" என்பார். இந்த வீடியோவை அதிமுகவின் பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications