முதல்வர் வேட்பாளர் விஜய்.. அதிமுக அழைப்பை நிராகரித்ததா தவெக? சிறப்பு பொதுக்குழுவில் வரும் அறிவிப்பு!
சென்னை: தவெகவின் கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமாரின் கருத்து இறுதியானதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி நேரடியாக தவெகவை கூட்டணிக்கு அழைத்துள்ள போதும், கடந்த மாதம் எடுக்கப்பட்ட நிலைப்பாடே இப்போதும் தொடர்வதாக தெரிவித்தார். இதனால் விஜய்யின் எண்ணம் என்னவாக இருக்கிறது என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
கரூர் துயரச் சம்பவத்திற்கு பின் கடந்த ஒரு மாத காலமாக தவெக சைலண்ட் மோடில் இருந்த நிலையில், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. ஏற்கனவே நேற்று நிர்வாகக் குழு கூட்டம் நடந்த நிலையில், நவம்பர் 5ஆம் தேதி தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்று விஜய் அறிவித்துள்ளார். இந்த பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடலாம் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது.

தவெகவின் அடுத்தக் கட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் விஜய் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்றும், தவெக தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் இருந்து விஜய் இறங்கி வந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
ஏனென்றால் கரூர் விவகாரத்திற்கு பின் அதிமுக - தவெக கூட்டணி அமைவதற்கான சூழல் கணிந்தது. தவெக கொடியை பார்த்து எடப்பாடி பழனிசாமி நேரடியாகவே பிள்ளையார் சுழி போட்டாச்சு.. கொடி பறக்குது என்று ஆர்ப்பரித்தார். ஆனால் விஜய்யின் மவுனம் அதிமுகவினருக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது. இந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி பேச்சு குறித்து சிடிஆர் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சிடிஆர் நிர்மல் குமார், கூட்டணி விவகாரத்தில் கடந்த மாதம் தவெக என்ன நிலைப்பாட்டில் இருந்ததோ, அதே நிலைப்பாட்டுடன் தான் இப்போதும் இருக்கிறது என்று தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சில் என்ன நிலைப்பாடு என்பதை கூட விளக்கவில்லை. ஆனாலும் அதிமுக கூட்டணியை தவெக நிராகரித்ததா என்று முழு முடிவுக்கு அக்கட்சியினரால் கூட வர முடியவில்லை.
ஏனென்றால் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கூட்டணி விவகாரத்தை விஜய் மற்றும் அவரது தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் முடிவு செய்கிறார்கள் என்று பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டணி விவகாரம் தொடர்பாக விஜய் சிறப்பு பொதுக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்றும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications