அமித்ஷா டீமிடம் இருந்து வந்த மெசேஜ்.. டோனை மாற்றிய அண்ணாமலை.. உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: கடந்த சில நாட்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று அண்ணாமலை பேசி வருவது அதிமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு டெல்லியில் அமித்ஷா டீமிடம் இருந்து அண்ணாமலைக்கு பறந்த மெசேஜ் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டு, அந்த பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் கொண்டு வரப்பட்டார். இதன்பின் அன்றைய நாளிலேயே அமித்ஷா முன்னிலையில் அதிமுக - பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டது.

ஆனாலும் அண்ணாமலை தொடர்ச்சியாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு இடையில் மோதலை உருவாக்கும் வகையில் சில வார்த்தைகளை பேசி வந்தார். கூட்டணி ஆட்சி என்ற பதத்தை கடந்து பாஜக ஆட்சி என்று அண்ணாமலை பேசியதோடு மட்டுமல்லாமல், முதல்வர் வேட்பாளரை பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும் என்றும் பகீர் கிளப்பினார்.
இதனால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். அண்ணாமலையின் டோனை பார்த்த நயினார் நாகேந்திரனும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று சொல்வதை மாற்றிக் கொண்டார். அதேபோல் அமித்ஷாவும் ஒவ்வொரு முறை தமிழ்நாடு வரும் போதும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி என்று சொல்வதை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்வதையும் தவிர்த்து வருகிறார். இதனால் அதிமுக தரப்பு அதிருப்தியில் இருந்தது. இதனிடையே நெல்லை சென்ற எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு சென்று விருந்தில் கலந்து கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பாஜக மேலிடத்திற்கு சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்பின் நெல்லை வந்த அமித்ஷா, அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரிடம் தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் இருந்து சொல்லப்பட்ட தகவல்கள் அமித்ஷாவிடம் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதற்கு முன்பாகவே அமித்ஷா டீமிடம் இருந்து அண்ணாமலைக்கு சில அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெல்ல வேண்டுமென்றால், அதிமுகவின் தயவு முக்கியம். அதனால் அதிமுகவுடன் மோதலில் ஈடுபட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளன. இதன்பின்னரே அண்ணாமலை மொத்தமாக தனது டோனை மாற்றி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் உயிரைக் கொடுத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று அண்ணாமலை பேசுவதற்கு பின்னணியிலும் அமித்ஷா டீம் கொடுத்த அழுத்தம் என்றும் கூறப்படுகிறது. ஒரு வழியாக கொங்கு மண்டலத்தில் முக்கிய புள்ளியாக இருந்த அண்ணாமலை குரலை மாற்றியது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications