பாஜகவை எதிர்ப்பது போல் ஆகிவிடும் என்பதால் அதிமுக வெளிநடப்பு.. போட்டு தாக்கிய துரைமுருகன்
சென்னை: கவர்னரை எதிர்த்தால் அது மோடியை எதிர்ப்பது போல் ஆகிவிடும் பாஜகவை எதிர்ப்பது போல் ஆகிவிடும். எனவே இல்லாத காரணத்தை சொல்லிவிட்டு வெளியே அதிமுகவினர் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
தமிழக கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இன்றத சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசினர் தனித்தீர்மானத்தை முதல் அமைச்சர் முன்மொழிந்தார். பின்னர் உறுப்பினர்கள் பேசினர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி " ஆளுநர் இந்த 10 சட்ட முன்வடிவுகளையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக நான் கருதுகிறேன்" என்று பேசினார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் நிலுவையில் வைக்கவில்லை. திருப்பி அனுப்பி வைத்துள்ளார்" என்றார். அதேபோல், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும் போது, "ஆளுநருக்கோ, குடியரசுத்தலைவருக்கோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனுப்பி வைக்கும் போது, With Held என்று சொல்வது நிராகரிப்பதாகவே பொருள்" என்றார். இவ்வாறாக எடப்பாடி பழனிசாமி - அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது ஜெயலலிதா பெயரிலான மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட்டதாக கூறி அதிமுக எம்.எல். ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஜெயலலிதா பெயரிலான மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படவில்லை என கூறினார். இதேபோல் அமைச்சர் துரைமுருகன், "இல்லாத காரணத்தை சொல்லிவிட்டு அதிமுகவினர் வெளியே போயிருக்கிறார்கள்" என்று கூறினார்.
அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:- ஜெயலலிதா பெயரை மாற்றிவிட்டார்கள் என்று சொல்லி ஒரு உண்மைக்கு மாறான செய்தியை இங்கு சொல்லி விட்டு அவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டார்கள். அவர்கள் வெளிநடப்பு செய்ததற்கான நோக்கம் ஜெயலலிதா பெயரை எடுத்தாங்க என்பதற்காக அல்ல.. இல்லாத ஒன்றை குற்றச்சாட்டாக கூறியிருக்கிறார்கள்.
பாஜகவில் இருந்து வெளியே வந்துவிட்டாலும், அவர்களுக்கு இடையே, உள்ளூர ஒரு நீரோட்டம் இருக்கிறது என்பது, இந்த வெளிநடப்பு செயலால் உறுதியாகியுள்ளது.
ஆகையினால் கவர்னரை எதிர்த்தால் அது மோடியை எதிர்ப்பது போல் ஆகிவிடும்.. பாஜகவை எதிர்ப்பது போல் ஆகிவிடும்.. எனவே இல்லாத காரணத்தை சொல்லிவிட்டு வெளியே போயிருக்கிறார்கள். ஆகவே கிராமத்தில் சொல்வார்கள் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று. அதுமாதிரி அதிமுகவினுடைய கொள்கை என்ன லட்சனம் என்ன என்பதை தெரிவித்துவிட்டார்கள். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications