அதிமுக- பாஜக உறவு முறிவு! சைலண்ட் மோடில் 'இரு தலை'கள்! அதிமுகவில் பிரளயத்துக்கு பிள்ளையார் சுழி!
சென்னை: அதிமுக, பாஜக இடையேயான உறவு முறிந்து போனதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட அதிமுகவின் மேற்கு மண்டலத்தின் இரு தலைவர்கள் வாய்மூடி மவுனிகளாக தொடர்ந்து சைலண்ட் மோடில் இருந்து வருவதை அக்கட்சியினரே பீதியுடன் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஜெயலலிதாவை ஊழல் பேர் வழி என்றார்.. அண்ணாவை ஒளிந்து கொண்ட கோழை என்றார்.. பெரியார் அடிவாங்கிய கதையை சொல்வேன் என்கிறார்.

கண்டனம் தெரிவிக்கும் மூவரணி: அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவில் எப்போது பார்த்தாலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர்தான் கருத்தும் கண்டனமும் தெரிவிக்கின்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமக்கே உரித்தான எகத்தாள நக்கலுடன் அண்ணாமலையை வெளு வெளுவென வெளுக்கிறார்.
சிவி சண்முகம், செல்லூர் ராஜூ: ஜெயக்குமாரை விட மிஞ்சி சிவி சண்முகமோ, எக்ஸ்ட்ரீம் எல்லைக்குப் போய் அண்ணாமலையை கடுமையாக விசாரிக்கிறார். சிவி சண்முகத்தின் பேச்சுக்கு பெரும் கொந்தளிப்பை எதிர்வினையாக அண்ணாமலை காட்டுகிறார். இன்னும் உச்சமாக, அண்ணாமலையில் நாக்கு துண்டாகும்; நாக்கு அழுகும் என செல்லூர் ராஜூ எச்சரிக்கிறார்.
அதிமுக பாஜக கூட்டணி முறிவு: இந்த களேபரங்களில் பெரும் திருப்பமாக அதிமுக கூட்டணியில் பாஜக இனி இல்லை என்ற அறிவிப்பை ஜெயக்குமார் நேற்று வெளியிடுகிறார். பாஜகவில் இருக்கிற நண்டு சிண்டு தலைவர்கள் எல்லாம் கூட ஆளுக்கு ஒரு திசையில் இன்று அண்ணா திமுகை வசைபாடுகின்றனர்.
அமைதியாக இருக்கும் இரு தலைகள்: இத்தனை யுத்தம் நடந்து கொண்டிருக்க அண்ணா திமுகவின் மேற்கு மண்ட தலைவர்கள் இருவர் மட்டும் எதுவுமே நடக்காதது போல ரொம்பவே அமைதி காத்து வருவதுதான் அக்கட்சியினரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாஜகவுடனான எந்த ஒரு மோதலுக்கும் இந்த இரு தலைவர்களும் ஒருபோதும் கருத்து சொன்னதே கிடையாது. இவர்கள் இருவருமே பல்வேறு வழக்குகளில் சிக்கி பாஜகவின் பிடியில் இருப்பவர்கள் என்றே கூறப்படுகிறது. ஆனாலும் அதிமுகவுக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போதாவது இவர்கள் வாய் திறப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போகிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே: இவர்களில் ஒருவர்தான், அதிமுகவில் பாஜகவின் ஏக்நாத் ஷிண்டேவாக உருவாக்கப்பட்டுள்ளார் என்பதை நாமும் முன்கூட்டியே பதிவு செய்திருந்தோம். அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளை கேட்டு அடம் பிடிப்பதுதான் இத்தனை பஞ்சாயத்துக்கும் அடிப்படை பின்னனி. ஆமாம், பாஜக கேட்கிற 20 தொகுதிகளை கொடுத்தால் என்ன என்பதுதான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேவின் வலுவான கருத்தாம். இப்போது ஏக்நாத் ஷிண்டே தமது வீட்டு விசேச நிகழ்ச்சியை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினரை கமுக்கமாக திரட்டி வருகிறராம். அந்த விசேச நிகழ்ச்சியையே ஒரு மாநாடு போல நடத்திக் காட்டி தனது வலிமையை பகிரங்கப்படுத்த ப்ளான் போடுகிறாராம் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே. இந்த முயற்சிகளுக்கு மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் மற்றொரு தலைவரும் ஆமாம் சாமி போட்டுக் கொண்டு சைலண்ட் மோடில் நிற்கிறாராம்.
பிரளயத்துக்கு பிள்ளையார் சுழியா?: பாஜகவை பகைத்துக் கொண்டிருக்கும் அதிமுகவில் பிரளயத்துக்கு இந்த மேற்கு மண்டலத்தின் இரு தலைவர்களும்தான் பிள்ளையார் சுழி போடுவார்கள் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். லோக்சபா தேர்தல் நேரம் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவின் இந்த இரட்டை ஏக்நாத் ஷிண்டேக்கள் வெடித்து வெளியே வருவார்கள் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications