"எனது சுற்றுப்பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்”.. எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னை: "நான் எப்போதும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், எனது சுற்றுப்பயணம் மூலம் அதிமுக மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்று, மாற்றத்தை ஏற்படுத்தும்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி. சுற்றுப் பயணத்திற்கான லோகோ மற்றும் பாடலை இன்று வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதைத்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சியை அகற்றவே சுற்றுப்பயணம் செல்கிறேன். ஜூலை 7 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறேன். 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
திமுகவை வேரோடு அழிக்க வேண்டுமென தொடங்கப்பட்ட கட்சிதான் அதிமுக. நான் எப்போதும் மக்களுடன் தான் பயணிக்கிறேன். எனது சுற்றுப்பயணம் மூலம் அதிமுக மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெறும். இந்தப் பயணத்தின் நோக்கம், கடந்த 50 மாத ஆட்சியிலே மக்கள் படும் துன்பங்களை எடுத்துச் சொல்லி மக்கள் ஆதரவை அதிமுகவுக்கு திரட்டுவது தான்.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. நான்தான் முதலமைச்சர் வேட்பாளர். ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்" எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் வரும் 7 ஆம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்னும் 8 மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. வரும் ஜூலை 23 ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்துக்கான ஷெட்யூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 7 ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையம், 8 ஆம் தேதி கோவை மாநகர், 10 ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனம், 11 ஆம் தேதி விழுப்புரம், 12 ஆம் தேதி கடலூர், 14 ஆம் தேதி கடலூர் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, 15 ஆம் தேதி பெரம்பலூர், அரியலூர், 16 ஆம் தேதி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், 17 ஆம் தேதி மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், 18 ஆம் தேதி திருவாரூர், நாகை, கீழ்வேளூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி.
வரும் 19 ஆம் தேதி நாகை, வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, 21 ஆம் தேதி திருவாரூர் மன்னார்குடி, கும்பகோணம், 22 ஆம் தேதி தஞ்சாவூர் பாபநாசம், திருவையாறு, 23 ஆம் தேதி தஞ்சாவூர் மத்தியம் ஒரத்தநாடு, பேராவூரணி பட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications