தமிழகத்தில் அதிமுகவுக்கு இதுதான் நடக்க போகுது.. டிடிவி தினகரன் என்ன சொல்லியிருக்கார் பாருங்க
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக 3வது இடத்தை தான் பெறும் என்று தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 22 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் அரசியல் களம் அனல் பறக்கிறது. அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சீமான் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய உள்ளது. இதனால் இறுதி கட்ட பிரசாரம் தற்போது நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக கூட்டணி அமைத்து அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. இதனால், அதிமுக - பாஜக இடையே வார்த்தை யுத்தம் இந்த பிரசாரத்தில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிறகு அதிமுக உண்மையான தலைவர்கள் கைக்கு வரும் என்று டிடிவி தினகரனை பக்கத்தில் வைத்தே அண்ணாமலை பேசினார்.
அதேபோல், ஓ பன்னீர் செல்வத்தை ஆதரித்து ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்த போது, திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டது போல அதிமுகவில் இருந்து ஓபன்னீர் செல்வம் வெளியேற்றப்பட்டதாக பேசினார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.
முன்னதாக, இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , தேர்தலுக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் தமிழக பாஜக தலைவராகிவிடுவார் என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:- பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னார் டிடிவி தினகரன். அப்புறம் இப்போ பாஜக கூட்டணி வைத்து தான் போட்டியிடுகிறார்.
இதோடு ஓ பன்னீர் செல்வத்தையும் அழைத்து சென்றுவிட்டார்கள். இரண்டு பேரும் தேர்தலுக்கு பிறகு பாஜகவின் தலைவராகிவிடுவார்கள். ஓ பன்னீர் செல்வம் தமிழக பாஜக தலைவராக ஆகிவிடுவார். டிடிவி தினகரன் பொதுச்செயலாளர் ஆகிவிடுவார். தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை காணாமல் போகிவிடுவார். அவர் சாப்டர் க்ளோஸ்.. அவ்லோ தான்.. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications