தொகுதி பங்கீடே முடியவில்லை.. 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல்.. அதிமுக அதிரடி
சென்னை: வரும் 11ம் தேதி முதல், அதிமுக வேட்பாளர்களுக்கான, நேர்காணல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், பாஜக, அதிமுக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக கட்சியும் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி, சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், 12ஆம் தேதி 19 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.
ஏற்கனவே விருப்பமனு யாரெல்லாம் வழங்கியுள்ளார்களோ அவர்களிடமெல்லாம் நேர்காணல் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம், கட்சிக்கு 1 தொகுதியும், பாமகவிற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு ஐந்து தொகுதிகளும் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது.
Also Read | ஆக, போற போக்கை பார்த்தால்.. "மக்கள் செல்வன் நலக் கூட்டணி" உருவாகிடுமோ!!!
ஆனால் எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடப்போகிறார்கள் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் அதிமுக நேர்காணலை நடத்த உள்ளது.
புதுச்சேரியை பொறுத்தளவில் கூட்டணி கட்சியான என்ஆர் காங்கிரஸிற்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது, உறுதியாகிவிட்டதால் அதற்கான நேர்காணல் நடைபெறாது என்று தெரிகிறது.