அதிமுக பொதுக்குழு, செயற்குழு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு சர்வ அதிகாரம்.. 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை: அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டங்கள் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் இன்று நடைபெறுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்துள்ளார். அதனை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்துள்ளார்.
டிசம்பர் மாதம் வந்தாலே அரசியல் கட்சிகளின் பொதுக்குழு கூட்ட அறிவிப்புகள் களை கட்டி விடும். இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று கூடி உள்ளது. சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட பிறகு அதிமுக பொதுக்குழு செயற்குழு கூடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாக பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல்பொதுக்குழு செயற்குழு கூட்டம் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கூட்டம் நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 23 தீர்மானங்களை எடப்பாடி பழனிச்சாமி முன் மொழிந்தார் அதனை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்.
பொதுக்குழு கூட்டத்தில் முன்ளாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரை நிகழ்த்தினார். எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக அரியணையில் அமர வைப்போம் என்றும் கூறி பேசினார். மறைந்த உறுப்பினர்கள் சிலருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளவர்களுக்கு சிறப்பான முறையில் விருந்து தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications