இவரா? அவரா? பிகேவுக்கு செம டஃப் கொடுக்க களம் இறங்கிய சுனில்.. பலே வியூகம்.. விறுவிறுப்பாகும் களம்!
திமுகவின் சுனில் அதிமுகவுக்கு வியூகம் அமைக்க திட்டம் என கூறப்படுகிறது
சென்னை: கொரோனா பரபரப்பில் ஒரு செய்தி பற்றிக் கொண்டு தீயாய் பறந்து சுழன்று வருகிறது.. அது திமுகவின் சுனில் அதிமுக பக்கம் வர போகிறார் என்பதுதான்.. இதெல்லாம் உண்மையா? பொய்யா? என தெரியவில்லை.. ஆனால், ஆளும் கட்சியுடன் தேர்தல் நிபுணர் சுனிலுடன் கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது மிகப்பெரிய அரசியல் பரபரப்பை தந்து வருகிறது.
கொரோனா பரவல் தீவிரமாவதற்கு முன்பு, 2021ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகங்களை கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் சத்தமில்லாமல் செய்து கொண்டுதான் வந்தன.. அதற்கான அதிரடிகளையும், பிளான்களையும் ஆளுக்கு ஒரு பக்கம் இறக்கி கொண்டிருந்தனர்.
எப்படியாவது ஆட்சிக்கு வந்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த திமுக, பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தது.. அதேபோல, எடப்பாடியார் தரப்புக்கு பின்னால் சுனில் இருப்பதாக சொல்லப்பட்டது.
சென்னையில் சட்டனெ குறைந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை- கிளம்பியது விவாதம்
ஜெயலலிதா
இதுவரை தலைவர்கள் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இப்படி எந்த கார்ப்பரேட்களை நம்பியும் அரசியல் செய்யவில்லை.. தங்கள் அனுபவம், அறிவு, முதிர்ச்சி பக்குவத்தாலேயே கட்சியை வழிநடத்தினர்.. குறிப்பாக இவர்கள் தங்களது தொண்டர்களைத்தான் அளவுக்கு அதிகமாக நம்பினார்கள்.. ஆனால் இன்று எப்படியாவது முதல்வர் பதவியை பிடித்துவிட வேண்டும் என்பதற்காகவே பிரசாந்த் கிஷோரை உள்ளே அழைத்து வந்தார்.
முதிர்ச்சி இயக்கம்
திமுக ஒரு முதிர்ச்சி இயக்கம், அறிவார்ந்த இயக்கம்.. ஆனால் கார்ப்பரேட்களில் கையில் கட்சியை அடமானம் வைப்பது தேவையா என்ற கேள்விகளும் எழுந்தன.. சீனியர்கள் சிலருக்கு பிகே-வை இப்போது வரை பிடிக்கவில்லை.. பல மா.செ.க்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றெல்லாம்கூட செய்திகள் கசிந்தன.. இந்த சமயத்தில்தான் கொரோனா பரவல் வேகமாக வந்தது.. "ஒன்றிணைவோம் வா" என்ற ஐடியா உட்பட பலவற்றை திமுக அரங்கேற்றியது.. இது அத்தனைக்கும் பின்னாடி பிகே இருப்பதாகவே கூறப்பட்டது.
எடப்பாடியார்
இந்நிலையில் தற்போது திமுகவின் சுனிலுடன் எடப்பாடியார் தரப்பு கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... திமுகவின் A to Z சூத்திரதாரிதான் சுனில்.. பிகே-வுடன் கைகோர்த்து வேலை பார்த்த அனுபவம் உடையவர்.. ஸ்டாலினுக்கு நெருக்கம்.. அரசியல் ஆலோசகர்.. "நமக்கு நாமே" பயணத்தில் ஸ்டாலினின் கலர் கலர் டிரஸ்.. நடைபயணம், சைக்கிள் பயணம், டீ குடித்தது, வாக்கிங் போனது, நாத்து நட்டது.. இப்படி ரசிக்கும்படியான வியூகங்களை வகுத்து கொடுத்தது சுனில் தலைமையிலான டீம்தான்..
பதிலடிகள்
திமுக தலைமை குடும்பத்தில் அதிகாரம் மிக்க நபராக வலம் வந்த சுனில் மறைமுகமாக எடப்பாடியாருக்கு வியூகம் அமைத்து தருவதாக 2 மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது. கொரோனா விஷயத்தில் ஸ்டாலினுக்கு பதிலடிகளை தந்து அவரை ஆஃப் செய்வது முதல், அதிமுகவுக்குள்ளேயே விஜயபாஸ்கரின் செல்வாக்கு ஓங்க தொடங்கியபோது, அதற்கும் கடிவாளம் போட்டு அவரை ஓரங்கட்டியது வரை சுனில் ஐடியாதான் என்றார்கள்.
ட்விட்டர்
முக்கியமாக, கொரோனா ஒழிப்பு என்றால் தன் பங்கை தவிர வேறு யாருடைய பங்கும் இருந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது தனி ஒரு ஆளாகவே முதல்வர் டீல் செய்து வருவதற்கு முக்கிய காரணமே சுனில்தானாம்... முதல்வரின் புரோகிராம், பிரஸ்மீட் கட்சி கூட்டம், அவ்வளவு ஏன் ட்விட்டரில் யார் என்ன பதிவு கேட்டாலும், கேள்வி கேட்டாலும், உதவி கேட்டாலும் நேரடியாக ஓடோடி எடப்பாடியார் வந்து பதில் அளிப்பதும், மக்களுக்கு ஆறுதல் சொல்வதும், உதவி செய்வதும்கூட சுனில் தந்த ஐடியாபடிதான் என்று செய்திகள் வட்டமடித்தன.
ஹைடெக் முதல்வர்
பொதுவாக ஒரு கட்சியின் ஐடி விங் தான் அனைத்து செயல்பாடுகளையும் புரமோட் செய்யும் என்றாலும், "விவசாயி முதல்வர்" ஹைடெக் முதல்வராக 2 மாதங்களுக்கு முன்பு உருவெடுத்தார்.. பிரசாந்த கிஷோர் என்னவெல்லாம் செய்து அதிமுகவை வீழ்த்த நினைத்தாரோ அவை அத்தனையையும் தனி ஒரு நபராக முதல்வர் செய்ய தொடங்கினார்.. இதுவரை அதிமுகவுடன் சுனில் "பின்னணியில்" உள்ளார் என்ற தகவல் கசிந்து வந்த நிலையில் தற்போது "கைகோர்த்துள்ளார்" என்று பலமாக கூறப்படுகிறது.
தேர்தல்
அதன்படி, அதிமுகவில் கிராம பஞ்சாயத்திலிருந்து வியூகமும் தொடங்கப்பட்டுள்ளது.. புதிய ஐடி விங்க் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. அநேகமாக மாவட்ட அளவில் பல மாற்றங்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இன்று எடப்பாடியாருக்கு இருக்கும் அத்தனை இமேஜும் வரப்போகிற தேர்தலுக்கு வாக்காக பயன்படுத்தவும் திட்டம் உள்ளதாம்.
திமுக?அதிமுக?
2018-ல் திமுகவிற்காக சுனில் பணியாற்றியபோது, தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலையை திமுக உருவாக்கியதில் முக்கிய பங்காற்றினார்.. இப்போது மோடிக்கு ஆதரவாக அதிமுகவில் எப்படி பணியாற்ற போகிறார் என்பது மிகப்பெரிய ஆவலாக உருவெடுத்துள்ளது. இதற்கு பிகே என்ன மாதிரியான திட்டம் வைத்திருக்கிறார் என்பது அதைவிட ஆர்வமாக உள்ளது.. ஆக மொத்தம் கொரோனாவையும் தாண்டி வரப்போகும் தேர்தலுக்கான முதல் களத்தில் மெல்ல அடியெடுத்து வைத்துள்ளது அதிமுக!! சுனிலா? பிகேவா? அல்லது திமுகவா? அதிமுகவா? யாருக்கு வாழ்வு? சாவு? என்பது போக போகத்தான் தெரியும்.