அதிமுக-பாஜக கூட்டணி முறிவு மேட்டர் பீகார் வரை போயாச்சு.. "பேரிழப்பு.." தேஜஸ்வி ஒரேபோடு
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி இருப்பது பாஜகவுக்கு பெரிய இழப்பு என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இது அவர்கள் பிரச்சனை. அது பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. தமிழ்நாட்டில் திமுக வலுவாக உள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அவர்களுக்கு அஜண்டாவே இல்லை. தென் இந்தியாவில் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சி வெளியேறி உள்ளது. இது பாஜவுக்கு மிகப்பெரிய இழப்பு என்று கருதுகிறேன். ஏற்கனவே சிவசேனா, ஜேடியு, அகாலி தளம் கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி அர்த்தமற்றதாகி இருப்பது தெளிவாக தெரிகிறது. ஒற்றை சர்வாதிகாரிகள் அமர்ந்துள்ளார். இருவரை நாட்டை இயக்குகிறார்கள்." என்றார்.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா, குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களின் காரணமாக அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பாஜக கூட்டணியை விட்டே அதிமுக வெளியேற வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணியில் இருந்தே வெளியேறுவதாக அதிமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் சுழகப் பொதுச் செயலாளர், மான்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications