Air India: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்.. உயிர் தப்பிய 5 எம்பிக்கள்! என்ன நடந்தது?
சென்னை: திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒரு எம்பி உட்பட 5 எம்பிக்கள் இருந்தனர். இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியாவின் 'AI 2455' எண் கொண்ட விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் திருநெல்வேலி நாடாளுமன்ற எம்பி ராபர்ட் புரூஸ், கேரளாவின் காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால், யு.டி.எஃப். ஒருங்கிணைப்பாளர் அடூர் பிரகாஷ், மூத்த காங்கிரஸ் தலைவர் கொடிகுன்னில் சுரேஷ், கே. ராதாகிருஷ்ணன் என மொத்தம் 4 கேரள எம்பிக்கள், ஒரு தமிழக எம்பி உட்பட நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்தனர்.

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டது. அதாவது விமானத்தின் ரேடார் ஃபெயிலியராகியிருக்கிறது. விமானம் எந்த திசையை நோக்கி பறக்க வேண்டும் என்பதை இந்த ரேடார்தான் சரியாக சொல்லும். இது பழுதானதால் உடனடியாக தரையிறங்க வேண்டிய நிலைக்கு விமானம் உள்ளானது. இந்த தகவல் கேப்டன் மூலம் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு வழியாக விமானம் சென்னை வரை வந்திருக்கிறது. விமானம் தரையிறங்க அனுமதி கோரப்பட்டு தரையிறங்க முயன்றது. ஆனால் அந்த நேரம் பார்த்து விமான ஓடுபாதையில் மற்றொரு விமானம் நின்றிருக்கிறது. இதை மீறி தரையிறக்கியிருந்தால் இரண்டு விமானங்களும் மோதி கடுமையான உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் விமானி சாமர்த்தியமாக விமானத்தை சட்டென மேலே உயர்த்தியிருக்கிறார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக விமானம் வானத்திலேயே வட்டமடித்திருக்கிறது. பின்னர் அது பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்கிறது.
விமானம் தரையிறங்கியவுடன் இந்த விவகாரம் குறித்து சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் கே.சி.வேணுகோபால் புகார் அளித்திருக்கிறார். விபத்து நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், வாய்ப்புகளின் அடிப்படையில் விமான பயணம் இருக்க கூடாது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர்,
"திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 2455ல், நானும், பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், நூற்றுக்கணக்கான பயணிகளும் பயணித்த நிலையில், இன்று ஒரு பெரும் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது.
தாமதமான புறப்பாடு ஒரு பயங்கரமான பயணமாக மாறியது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான காற்றழுத்தச் சரிவில் சிக்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, விமானி சிக்னல் கோளாறு காரணமாக விமானம் சென்னையை நோக்கித் திருப்பிவிடப்பட்டதாக அறிவித்தார்.
தரையிறங்குவதற்கு அனுமதி வேண்டி, கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் விமானம் வட்டமிட்டது. முதல் முறை தரையிறங்க முயன்றபோது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாகக் கூறப்பட்டது. அந்த நொடியில், விமானியின் விரைவான முடிவால் விமானம் மீண்டும் மேலே உயர்த்தப்பட்டது, இதனால் விமானத்தில் இருந்த அனைவரின் உயிரும் காப்பாற்றப்பட்டது. இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
நாங்கள் விமானியின் திறமையாலும், அதிர்ஷ்டத்தாலும் காப்பாற்றப்பட்டோம். பயணிகளின் பாதுகாப்பு அதிர்ஷ்டத்தைச் சார்ந்து இருக்கக்கூடாது. இந்தச் சம்பவத்தை அவசரமாக விசாரித்து, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் அமைச்சகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications