NO NEED.. ’மாற்றம்’ தேவையில்லை என சொன்ன நடிகர் அஜித் குமார்? இல்லவே இல்லை என்கிறார் சுரேஷ் சந்திரா!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது மாற்றம் தேவையா என தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வி கேட்டதாகவும் அதற்கு அவர் NO NEED என பதில் அளித்ததாக கூறப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் NO NEED என அஜித்குமார் சொல்லவில்லை என விளக்கம் அளித்துள்ளார் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா.
சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித்குமார் இன்று காலை 6.50 மணிக்கே வருகை தந்தார். தொடர்ந்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்ட அவர், பின்னர் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அப்போது அந்த வாக்குச்சாவடியில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.

காரில் வாக்குச்சாவடிக்கு வந்த அஜித்தை கண்டதும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சூழ தொடங்கினர். வெள்ளை நிற கோட்டுடன், கருப்பு நிற கண்ணாடி அணிந்தபடி வாக்குச்சாவடிக்குள் நுழைந்த அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாதுகாப்புடன் உள்ளே அழைத்துச் சென்றனர்.
வாக்களித்த பின்னர் அவர் வெளியே வந்தபோது, அங்கு காத்திருந்த ரசிகர்கள் "அஜித்... தலைவா..." என கோஷமிட்டனர். "வாழு வாழவிடு தலைவா" எனவும் ஆர்ப்பரித்தனர். இதனால் அங்கு சிறிய அளவில் குழப்பமான சூழல் உருவானதாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த சூழலை எதிர்பாராத அஜித், தனது காதுகளை கைகளால் பொத்திக்கொண்டு, தலையை குனிந்தபடி விரைவாக அங்கிருந்து வெளியேறினார்.
இதற்கிடையில், வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது, "மாற்றம் தேவையா?" என்ற கேள்விக்கு நடிகர் அஜித்குமார் "No Need " என பதில் அளித்ததாக தகவல்கள் பரவின. இதனை மு.க. ஸ்டாலின் வரவேற்றதாகவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்கள் தொடர்பாக நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதில், "நடிகர் அஜித்குமார் 'No Need to Change' என்று எதுவும் கூறவில்லை. அவர் அப்படியான எந்த கருத்தையும் வெளியிடவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட அந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் அஜித்திடம் மைக்கை நீட்டி மாற்றம் தேவையா என கேட்டதாகவும், பேட்டிக்கு தேவையில்லை அதாவது பேட்டி அளிக்க முடியாது என அஜித் சொன்னதாகவும் அந்த தொலைக்காட்சி மாற்றி செய்தி வெளியிட்டுள்ளதாக மற்றொரு தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார் சுரேஷ் சந்திரா.












Click it and Unblock the Notifications