நகையை பறி கொடுத்த பெண்ணை காத்திருக்க வைத்த லோக்கல் போலீஸ்.. திடீரென சீனுக்குள் வந்த ஸ்பெஷல் டீம்.!
சிவகங்கை: நகையைத் திருடியதாக குற்றச்சாட்டில் காவல் விசாரணையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித் குமார் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் நகையை காணவில்லை என புகார் கொடுத்த பெண்ணை பல மணி நேரங்கள் காவல்துறையினர் அலையவிட்டதும், சிஎஸ்ஆர் கூட தரவில்லை என அந்தப் பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பெண்ணை அலைக்கழித்த நிலையில் எதற்காக ஸ்பெஷல் டீம் விசாரணைகள் இறங்கியது என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே மனப்புரத்தில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த கோவிலுக்கு சென்றிருக்கிறார். மாற்றுத்திறனாளி ஆன அவருக்கு உதவும் வகையில் சக்கர நாற்காலியை அதே கோவிலில் பாதுகாவலராக பணிபுரியும் அஜித் குமார் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து தங்களது காரை பார்க்கிங் செய்ய வேண்டுமென அஜித்குமாரிடம் அந்த பெண் சொன்னதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கூட்ட நெரிசல் காரணமாக தாங்கள் அணிந்திருந்த 10 சவரன் நகையை அந்த பெண்ணும் காரில் வைத்திருக்கின்றனர். இதற்கிடையே கோவிலுக்கு சென்று விட்டு பார்த்தபோது காரின் பின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என அந்த பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார்.
இதை அடுத்து கோவில் ஊழியர்கள் அஜித்குமாரை திருபுவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து இருக்கின்றனர். திருபுவனம் குளம் அருகிலும், கோவில் வளாகத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் வைத்து அஜித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அஜித்குமாரின் சகோதரர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் காவல்துறை விசாரணையில் இருந்தபோது அஜித்குமார் உயிரிழந்தார்.
இதை எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். போலீசார் தாக்கியதால் தான் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறிய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அஜித்குமார் மரணம் தமிழக அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள நீதிமன்ற காவல்துறையினருக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் நகையை காணவில்லை என புகார் கொடுத்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பேசியுள்ள புகார் கொடுத்த பெண்," எனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் ஸ்கேன் எடுக்கச் சென்றோம். ஆனால் மடப்புரம் பத்ரகாளியம்மன் தரிசித்த பிறகு தான் ஸ்கேன் செய்ய வருவேன் என கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து நாங்கள் கோவிலுக்கு வந்தோம். அப்போது சீருடை அணிந்திருந்த காவலர் எங்களுக்கு உதவினார்.
எனது தாய்க்கு வீல்சேரை கொண்டு வந்து கொடுத்தார். நான் எனது தாயை வீல்சேரில் அமர வைத்து கோவிலுக்கு சென்றேன். முன்னதாக நகைகளை கழற்றி கைப்பையில் வைத்து காரின் பின் சீட்டில் வைத்திருந்தோம். தொடர்ந்து அஜித்குமார் காரை பார்க்கிங் செய்ய சென்றார். நீண்ட நேரம் கழித்து நான் வந்த போது காரை எங்களிடம் கொடுத்தார். தொடர்ந்து நாங்கள் சாப்பிட சென்றபோது நகையை போட்டுக் கொள்ளலாம் என பார்த்தபோதுதான் நகைப்பை மாயமாகி இருந்தது.
உடனடியாக நாங்கள் கோவிலுக்கு வந்து கோவில் அதிகாரிகளிடம் கூறினோம். உடனடியாக அஜித்குமாரை பிடித்து காவல் நிலையத்திலும் ஒப்படைத்தோம். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதியம் இரண்டு மணிக்கு வந்து இரவு நேரம் ஆகியும் இன்ஸ்பெக்டர் வெளியே போயிருக்கிறார் என சொல்கிறார்கள். நாங்கள் புகார் கொடுத்தும் சிஎஸ்ஆர் தரவில்லை. எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறார்களா எனவும் தெரியவில்லை. எங்களது நகையை மீட்டுக் கொடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதன் மூலம் புகார் கொடுத்தவர்களை போலீசார் நீண்ட நேரம் காவல் நிலையத்திலேயே அமர வைத்து அலைக்கழித்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து விட்டு திடீரென அந்த இளைஞரை ஸ்பெஷல் டீம் விசாரணைக்கு அழைத்துச் சென்றது எப்படி? அவர்கள் எப்படி விசாரணைக்குள் வந்தார்கள்? குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி கொடூரமாக தாக்கியது ஏன்? என பல கேள்விகள் எழுந்துள்ளது. இழுத்தடிக்கப்பட்ட புகாருக்கும், திடீரென அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததற்கும் இடையில் நடந்தது என்ன? எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications