கோயம்பேடு - நந்தம்பாக்கம்.. ஆலப்பாக்கம், சாலிகிராமம்.. சென்னை மெட்ரோ கொடுத்த சூப்பர் அப்டேட்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மிகவேகமாகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் உள்ள வேகம் காரணமாக பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடம் மக்களின் பயன்பாட்டிற்கு ஒரு மாதத்திற்குள் வரப்போகிறது. அதன்பிறகு கோயம்பேடு - சென்னை வர்த்தக மையம் உள்பட அடுத்தடுத்து பல்வேறு வழித்தடங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வரப்போகிறது. என்னென்ன வழித்தடங்களில் என்னென்ன பணிகள் முடியும் நிலையில் உள்ளது என்பதை பார்ப்போம்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம் மொத்தம் 118.9 கி.மீ நீளத்திற்கு, ₹63,246 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இது மொத்தம் 3 வழித்தடங்களாக பிரிக்கப்பட்டு நடந்து வருகிறது. வழித்தடம் 3 என்பத மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.8 கி.மீ)
இடையே இருக்கிறது. இது சென்னையின் வடக்குப் பகுதியைத் தெற்குப் பகுதியுடன் இணைக்கும் மிக நீண்ட வழித்தடமாக உள்ளது.

ஐடி காரிடர் வழித்தடம்
இந்த வழித்தடத்தில் மாதவரம், பெரம்பூர், ஐயப்பன் கோவில், ஓட்டேரி, புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், ராயப்பேட்டை, மயிலாப்பூர் (லஸ்), மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், ஓஎம்ஆர் (OMR) சாலை வழியாக காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரை செல்கிறது. இது ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஓஎம்ஆர் சாலையை நகரின் மையப்பகுதியுடன் இணைக்கும் வழித்தடமாக இருக்கிறது.
வழித்தடம் 4ல் பணிகள் எப்படி
வழித்தடம் 4 என்பது லைட் ஹவுஸ் - பூந்தமல்லி பைபாஸ் (26.1 கி.மீ) வரை இருக்கிறது. இது சென்னையின் கடற்கரை பகுதியை மேற்குப் புறநகர் பகுதியுடன் இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் லைட் ஹவுஸ், கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை, நந்தனம், தியாகராய நகர் (பனகல் பார்க்), கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், போரூர், காட்டுப்பாக்கம், மாங்காடு முதல் பூந்தமல்லி வரை இருக்கிறது. இதில் பூந்தமல்லி மற்றும் வடபழனி நிலையம் வரை பணிகள் முடிந்துள்ளது. இந்த வழித்தடம் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்போகிறது
வழித்தடம் 5ல் பணிகள்
அடுத்ததாக வழித்தடம் 5ல் மாதவரம் - சோழிங்கநல்லூர் (47 கி.மீ) வரை சென்னையின் பல முக்கியப் பகுதிகளைச் சுற்றி வரும் ஒரு இணைப்புப் பாதையாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் மாதவரம், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் மேற்கு, கோயம்பேடு, முகப்பேர், ஆலப்பாக்கம், போரூர், சென்னை வர்த்தக மையம் , ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை இருக்கிறது.
கோயம்பேடு நந்தம்பாக்கம் பணிகள்
மெட்ரோவின் 5-வது வழித்தடத்தில் கோயம்பேடு முதல் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம் வரையிலான மெட்ரோ பாதையில் 67% பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அதேபோல் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பகுதியை மெட்ரோ நிர்வாகம் விரைவில் திறக்க உள்ளது. இதில் வடபழனி நிலையம் மிக முக்கியமானது, ஏனெனில் இது முதல் கட்ட மெட்ரோவையும் இரண்டாம் கட்ட மெட்ரோவையும் இணைக்கும் முதல் சந்திப்பு நிலையமாக மாறப்போகிறது.
ஆலப்பாக்கம் - சாலிகிராமம்
இதில் ஆலப்பாக்கம் - சாலிகிராமம் ஆகிய இரண்டு நிலையங்களுக்கு இடையேயான பகுதி வரும் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. ரயில் செல்வதற்கான மேம்பாலப் பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்டவாளங்கள் அமைப்பு பணிகளை பொறுத்தவரை மொத்தம் உள்ள 12 கிலோமீட்டர் தூரத்தில், இதுவரை 2 கிலோமீட்டர் தூரத்திற்குத் தண்டவாளங்கள் அமைக்கும் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது.
சென்னை வர்த்தக மையம் செல்வது எளிது
இந்தத் திட்டங்கள் முடிவடையும் போது, சென்னையின் மேற்குப் பகுதிகள் (பூந்தமல்லி, போரூர்) நகரத்தின் மையப்பகுதிகளுடன் மிக எளிதாக இணைக்கப்படும். குறிப்பாக, கோயம்பேட்டில் இருந்து நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்திற்குச் செல்பவர்கள் இனி போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாகச் செல்வார்கள்.












Click it and Unblock the Notifications