கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை! தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த சட்டத்தில் திருத்தம்
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்து வைத்த நிலையில் அந்த மசோதா நிறைவேறியது. இந்த புதிய சட்டத் திருத்தத்தால் கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது தமிழகத்தில் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை பேரவையில் அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். இந்த சட்டத்தால் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை செய்வோருக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் . அத்துடன் ரூ 10 லட்சம் அபராதமும் விதிக்கும் கள்ளச்சாராயம் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் வகையில் இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் படிப்படியாக பூரண மது விலக்கு கொண்டு வரப்படும் என்றும் சட்டத் திருத்தம் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த பயன்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். இந்த நிலையில் இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது.
சட்டப்பேரவையில் உள்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற, பாமக சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஜி.கே.மணி, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ''கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து சில நாட்களாகவே கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரை உயிருக்கு ஆபத்துவிளைவிக்கக் கூடிய பொருட்களை காய்ச்சுதல், விற்பனைசெய்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதல்கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் -1937ல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படும் என நேற்று தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என பல அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று சட்டசபையில் மது விலக்கு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் ஜூன் 20 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி அரசுத் தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications