விமான சாகச நிகழ்ச்சி.. எல்லா ஏற்பாடுகளும் அரசு சார்பில் செய்யப்பட்டது.. மா சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை: இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்றும், மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி இன்று நடந்தது. 93 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படை அடியெடுத்து வைத்துள்ளதையடுத்து இன்று சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்சியினை சுமார் 15 பேர் வரை கண்டுகளித்தனர். இதனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் விமான சாகச நிகழ்ச்சியினை கண்டுகளித்த மக்கள் தங்களுக்கு போதுமான வசதிகளை செய்து தரவில்லை என்று குற்றச்சாட்டு வைத்தனர். வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் குடிநீர் வசதி, தற்காலிக கழிவறை வசதிகள் இல்லை என்றும் விமர்சித்தனர். மேலும் நிகழ்ச்சி முடிந்த பிறகு சரியான போக்குவரத்து வசதியினையும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
கூட்ட நெரிசல் மற்றும் வெப்பத்தால் நிகச்சிக்கு வந்திருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியும் இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய தவறிவிட்டதாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது;-
சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications