1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்.. சிபிஎஸ்இ அறிவிப்பு.. பள்ளி தேர்வின்படி 9, 11ம் வகுப்பு ரிசல்ட்
சென்னை: 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளையும் ஆல் பாஸ் செய்வதாக சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளையும் ஆல் பாஸ் செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிபிஎஸ்சி வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்த நிலையில், இதை ஏற்று, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளையும் தேர்ச்சியடையச் செய்வதாக அறிவித்துள்ளது சிபிஎஸ்இ. அதேநேரம் 9 மற்றும் 11ஆம் வகுப்பில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு அவர்களது பள்ளி தேர்வுகள், பருவ தேர்வுகள் அடிப்படையில் பாஸ் செய்யப்படுவார்கள், என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறிய தகவல்படி, 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் யாராவது தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக தேர்வு நடத்தி அதில் அவர்கள் பங்கேற்கலாம் என்று அறிவுறுத்தியிருந்தது. எனவே, மேலும் விவரங்களுக்கு அந்தந்த பள்ளிகளை, மாணவ, மாணவிகள் அணுகுவது நல்லது.