என்ன ‘துறை’யா இருந்தா என்ன? இந்த ‘அய்யாத்துரை’யின் நாளங்கள் தான்.. முதல்வர் ஸ்டாலின் சிலேடை பேச்சு!
சென்னை : "எனக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலில் வைக்க நினைத்த பெயர் அய்யாத்துரை. எனவே, அமைச்சர்கள் அனைவரும் தனித்தனி துறைகளின் பொறுப்புகளை வகித்தாலும், நீங்கள் அனைவரும் இந்த அய்யாத்துரையின் நாளங்கள் தான்." என அண்ணா பற்றி கருணாநிதி பேசியதைக் குறிப்பிட்டு சிலேடையாகப் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் நேற்று முதல் முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கும் உள்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி, வேங்கைவயல் விவகாரம், பல்வீர்சிங் ஐபிஎஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "நான் முதலமைச்சராக இருந்தாலும் எனது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை தான் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கையில் கடைசி துறையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளுமே எனது துறை என்பதால் தான் அப்படி எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி, மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளிக்கும்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசியதை சுட்டிக்காட்டினார். அறிஞர் அண்ணா அமைச்சரவையில் இருந்த ஒவ்வொரு துறைகளையும் குறிப்பிட்ட கருணாநிதி, நாம் வகிக்கும் துறைகள் வெவ்வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் அண்ணாதுரையைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டதை எடுத்துச் சொன்னார்.

எனக்கு எனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி முதலில் வைக்க நினைத்த பெயர் அய்யாத்துரை. எனவே, இன்றைக்கு அமைச்சர்கள் அனைவரும் தனித்தனி துறைகளின் பொறுப்புகளை வகித்தாலும், நீங்கள் அனைவரும் இந்த அய்யாத்துரையின் நாளங்கள் தான்." என சிலேடையாகப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் பேசிய ஸ்டாலின், "நாம் ஆட்சிக்கு வந்தபோது கடும் நிதி நெருக்கடி இருந்த நிலையிலும், பல மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து மகத்தான சாதனை புரிந்துள்ளோம். 1 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளார்கள். மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளதால் இனி தமிழ்நாட்டில் திமுகதான் நிரந்தரமாக ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications