மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சுமுகமான முறையில் நடந்து முடிந்துள்ள நிலையில், சென்னையில் 1980க்கு பிறகு இந்த முறை தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி உள்ளது.
நமது நாட்டில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நடந்து வெள்ளிக்கிழமை அமைதியாக முடிந்த நிலையில், நாடு முழுக்க இருக்கும் 102 தொகுதிகளில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி உள்ளது..

தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளிலும் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடந்த நிலையில், அங்கே 72% வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாக இருந்துள்ளது.
வாக்குப்பதிவு: கடந்த காலங்களைப் போலவே இந்த முறையும் நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களிலேயே தான் வாக்குப்பதிவு அதிகமாக இருக்கிறது. இந்த முறை தலைநகர் சென்னையில் மற்ற தொகுதிகளை விடச் சென்னையில் வாக்குப்பதிவு குறைவு என்றாலும் கூட தேர்தல்களுடன் ஒப்பிடும் போது கணிசமாக அதிகரித்துள்ளது.
சென்னையில் மொத்தம் 3 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 1980க்கு பிறகு சென்னையில் அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வடசென்னை: சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வடசென்னையில் தான் எப்போதும் சற்று அதிகமாக இருக்கும். வட சென்னையில் கடந்த முறை 64% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இந்த முறை 69% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. கடந்த 2009, 2014 தேர்தல்களிலும் கிட்டதட்ட 69% வாக்குகளே பதிவாகி இருந்தது. வடசென்னையில் 2004 - 45%, 1999 - 43%, 1998- 46%, 1996- 55%, 1991- 55%, 1989- 60%, 1984- 51% வாக்குகளே பதிவாகி இருந்தது. அதை விட இந்த முறை அதிகமாகும். 1980இல் வடசென்னையில் 71% வாக்குகள் பதிவான நிலையில், இப்போது மீண்டும் அதிகபட்சமாக 69% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
மத்திய சென்னை: மத்திய சென்னையில் கடந்த முறை 58% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில், இந்த முறை 67% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. கடந்த 2009, 2014 தேர்தல்களிலும் கூட இங்கு 61% வாக்குகளே பதிவாகி இருந்தது. மத்திய சென்னை தொகுதியைப் பொறுத்தவரை 2004 - 49%, 1999 - 48%, 1998- 49%, 1996- 57%, 1991- 54%, 1989- 60%, 1984- 64% வாக்குகளே பதிவாகி இருந்தது. 1980இல் மத்திய சென்னையில் 67% வாக்குகள் பதிவான நிலையில், இப்போது மீண்டும் அதே அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளது.
தென் சென்னை: அடுத்து தென்சென்னை தொகுதி.. இங்கு இந்த முறை மும்முனை போட்டி நிலவும் நிலையில், இங்கு 67% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த முறையுடன் ஒப்பிடும் போது இது 10% அதிகமாகும். கடந்த 2009, 2014 தேர்தல்களிலும் கூட இங்கு முறையே 62% மற்றும் 60% வாக்குகளே பதிவாகி இருந்தது. தென் சென்னை தொகுதியைப் பொறுத்தவரை 2004 - 47%, 1999 - 45%, 1998- 47%, 1996- 56%, 1991- 53%, 1989- 59%, 1984- 65% வாக்குகளே பதிவாகி இருந்தது. 1980இல் இங்கு 68% வாக்குகள் பதிவான நிலையில், இப்போது 67% வாக்குகள் பதிவாகி இருக்கிறது..












Click it and Unblock the Notifications