திருமணம் முடிந்த பெண்களுக்கு வேலை இல்லை? மீண்டும் சர்ச்சையில் பாக்ஸ்கான்! தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: ஐபோன்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான பாக்ஸ்கான், சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில், திருமணம் முடிந்த பெண்களுக்கு பணி மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் பாக்ஸ்கான். சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த ஆலையில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த ஆலையில் திருமணமான பெண்களை பணிக்கு எடுப்பது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. திருமணம் ஆகாத பெண்களை விட திருமணம் ஆன பெண்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களை பணிக்கு எடுக்காமல் பாக்ஸ்கான் புறக்கணிப்பதாக புகார்கள் எழுந்தன.
ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் போது பாகுபாடு காட்டக் கூடாது என்று 1976- ஆண்டின் சட்டம் தெளிவாக கூறுகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த புகார் விதிகளை மீறும் விதமாக இருப்பதால் இது குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசு, தமிழக தொழிலாளர் நலத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- திருமணம் ஆன பெண்களுக்கு பணி வாய்ப்பை பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியை கவனத்தில் எடுத்துள்ளோம். சம ஊதிய சட்டம் 1976- பிரிவு 5 படி ஆண், பெண் தொழிலாளர்களை பணிக்கு எடுக்கும் போது எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கே இதற்கான பொறுப்பு உள்ளதால்,தமிழக அரசிடம் இது குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. பாக்ஸ்கான் நிறுவனத்திடம் இது குறித்து கருத்து கேட்ட போது, பதிலளிக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு, பாக்ஸ்கான் நிறுவனத்தில் விடுதியில் உணவு உட்கொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அந்த தொழிற்சாலையில் பணி செய்யும் பெண் தொழிலாளர்கள் சென்னை - பெங்களூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மீண்டும் பாக்ஸ்கான் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாக்ஸ்கான் நிறுவனம் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் தொடர்வது, சீனாவுக்கு மாற்றாக, உலகின் ஐ போன் தயாரிப்பு மையமாக, இந்தியாவை கருதி வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த விவகாரம் நெருக்கடியை கொடுத்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications