காங்கிரஸுக்கு ராஜ்யசபா எம்பி சீட்! கூட்டணிக்கு முக்கிய பங்காற்றியவருக்கு ஒதுக்க தவெக திட்டம்!
சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த நிலையில், புதிய மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த எம்பி சீட்டை காங்கிரஸுக்கு கொடுக்க தவெக யோசித்து வருவதாகவும், அதுவும் காங்கிரஸ்-தவெக கூட்டணிக்கு அச்சாரம் போட்ட கதர் தலைவருக்கு கொடுத்தால் சூப்பராக இருக்கும் என்று நினைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கு வரும் ஜூன் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம், மயிலம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றதால், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாகவே இந்த இடம் காலியானது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற ஜூன் 11-ம் தேதி கடைசி நாள். ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் இறங்கினால், ஜூன் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அன்றே மாலை முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தலில் தவெக அறிவிக்கும் வேட்பாளரே வெற்றி பெறுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கூட்டணி தயவுடன் தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருப்பதால், கூட்டணி கட்சிக்கு இந்த பதவியை கொடுக்க கட்சி யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக தவெக ஆட்சி அமைக்க திணறிக்கொண்டிருந்தபோது சட்டென வந்து உதவிய காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க இருப்பதாகவும், அதிலும் தவெக-காங்கிரஸ் கூட்டணி அமைய காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்திக்கு இந்த பாதவியை கொடுக்க தவெக யோசித்து வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் முதலில் வந்து தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவை அறிவித்தது. பின்னர் வரிசையாக இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து விஜய்யை முதலமைச்சராக பதவியில் அமர வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications