லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா?.. வந்து விழுந்த கேள்வி.. டிடிவி தினகரன் பதில் இதுதான்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் அமமுக அதிமுகவுடன் இணைந்து போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிடிவி தினகரன் பதில் அளித்து கூறினார். மேலும் தமிழகத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தேர்தல் வேலைகளில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் பெறும் வெற்றியானது, 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் தற்போது கட்சிகள் தேர்தல் பணிகளை செய்து வருகின்றன.

தொகுதி வாரியாக வேட்பாளர்களை நியமிப்பது, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில், அதிமுகவை எடுத்துக்க்கொண்டால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக லோக்சபா தேர்தலை சந்திக்கிறது. இதனால் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மற்றும் அமமுக கட்சிகள் எப்படி போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதிமுக ஒன்றிணையும் என்றும் சசிகலா அடிக்கடி கூறி வந்தார். இதன் காரணமாக தற்போது நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து போட்டியிடுமா? இல்லை தனித்தனியாக தேர்தலை சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு டிடிவி தினகரன் பதில் அளித்து கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமியுடன் அமமுக சேர்வதற்கு வாய்ப்பே இல்லை. கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கொலை, கொள்ளை நடந்த போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடந்தது. கோடநாடு வழக்கில் நிறைய சாட்சிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனையும் மீறி காவல்துறை முழு மூச்சுடன் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
காவல்துறையின் முயற்சி வெற்றியடைய வேண்டும் என்பது எங்கள் நோக்கம் என்று பேசினார். தொடர்ந்து தமிழகத்தில் போலீசார் மீதே தாக்குதல் நடந்து வருவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து டிடிவி தினகரன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பொதுவாக காவல்துறை நன்றாக தான் செயல்பட்டு வருகிறது. அங்கு ஒன்றுமாக ஒரு சில இடங்களில் போலீசார் மீது மக்கள் வெகுண்டு எழுந்து தாக்குதல் நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications