சீமானை துரத்தும் பஞ்சாயத்து.. முதல்வர் முன்னிலையில் கொத்து கொத்தாக திமுகவில் இணைந்த தம்பிகள்!
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் 3000-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சிக்கு தற்போது நேரம் சரியில்லையோ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வழக்கமாக அவர் பேசும் பேச்சுகளுக்கு எதிர்வினைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த முறை எதிர்வினைகள் தீவிரமாக இருக்கின்றன. குறிப்பாக பெரியார் குறித்து சீமான் பேசியது, பெரியாரிய உணர்வாளர்களை தாண்டி, சமூக அக்கறை கொண்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக மாற்றத்திற்காக பெரியார் கூறிய கருத்துக்களை, சீமான் திரித்து கூறியதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.

குறிப்பாக, "பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்தார்? திராவிடர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் திருடர்கள்" என்று சீமான் கூறியிருந்தது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. சீமானின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 30க்கும் மேற்பட்ட பெரியாரிய அமைப்புகள் அவரது வீட்டை முற்றுகையிட முயன்றன. இந்த போராட்டம் சென்னையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஆனால் போராட்டக்காரர்களை எதிர்கொள்ள, நாதகவினர் உருட்டுக்கட்டையுடன் காத்திருந்தனர். இதனால் மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
"பெரியார் உங்களுக்கு தேவை எனில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள். அடிப்படையிலே பெரியார் பிழையானவர். தமிழ், தமிழர், தமிழர் அரசு இன்று பேசுவது பித்தலாட்டம் என்றும், திராவிட எழுச்சியை தடுப்பதற்கு செய்யக்கூடிய அயோக்கியத்தனம் என்றும், அவ்வாறு பேசுவது ஆரியர்களுக்கு செய்கிற கைக்கூலித்தனம் என்றும் பெரியார் பேசியிருக்கிறார்.
தமிழ் முட்டாள்களின் பாசை, தமிழ் சனியன், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ் சனியனை விட்டு ஒழியுங்கள், தமிழில் என்ன இருக்கிறது? தமிழ் உங்களை படித்து வைத்ததா? என்றெல்லாம் பெரியார் கேள்வி எழுப்பியிருந்தார். என் நிலத்தில் அப்படி பேசுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் கன்னடர்.
நீங்கள் என் நிலத்தில் வந்து அமர்ந்து கொண்டு தமிழ் முட்டாள்களின் மொழி என்று கூறுகிறீர்கள். என் மொழியை தாழ்த்தி பேசுவதற்கு உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது? நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை கைதான் ஓங்கி இருக்கிறேன் அதற்குள் இப்படி அலறினால்.. எப்படி?" என்று மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார். இதனையடுத்து அவர் மீதும், அவரது கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 3000க்கும் அதிகமானோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications