கண்கள் சிவந்த ஸ்டாலின்.. சிறையில் அமர் பிரசாத் ரெட்டி.. அடுத்து என்ன? அதிர்ச்சியில் அண்ணாமலை!
சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக இவர் கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தார். கடுமையான கருத்துக்களை கூறி வந்தார். இந்த நிலையில்தான் தற்போது பாஜக கொடி விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை பனையூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக சென்ற அரசு ஊழியரை தாக்கிய புகாரில், பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கைதுக்கான காரணம்: இவரின் கைதுக்கான காரணத்தை தாம்பரம் போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், தாம்பரம் மாநகரக் காவல் பள்ளிக்கரணை காவல் மாவட்டம், T20 கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக பிஜேபி தலைவர் திரு. அண்ணாமலை வீடு அமைந்துள்ளது.
நேற்று 20.10.2023 ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு முன்பு பிஜேபி தலைவர் திரு. அண்ணாமலை வீட்டு காம்பவுண்ட் சுவர் முன்பாக பொது இடத்தில் சுமார் 45 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் ஒன்று முன் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூராகவும், உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மிக அருகில் உயிருக்கு ஆபத்தான வகையில் அமைக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பொது இடத்தில் அமைக்கப்பட்ட மேற்படிகொடி கம்பத்தை சென்னை பெருநகர மாநகராட்சியினரும், போலீசாரும் அகற்ற முடிவு செய்து அதனை பிஜேபி கட்சியினருக்கு தெரியபடுத்தி இரவு 8 மணிக்கு போலீசார் உதவியுடன் கொடிக்கம்பத்தை அகற்ற முற்படும் போது பிஜேபி துணைத் தலைவர் திரு. கரு.நாகராஜன் தலைமையில் சுமார் 110 பேர் அரசுக்கு எதிராக கோஷமிட்டு தர்ணா செய்தவர்களை பலமுறை எச்சரித்தும் கேளாமல் தொடர்ந்து அரசு அலுவலர்களிடம் தகராறு செய்துகொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது T20 கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த JCB இயந்திரத்தை கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்த ஆறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு 5 உட்படுத்தப்பட்டனர், என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அரசு விடுமுறை: சென்னை பனையூரில் பாஜக கொடிக்கம்பம் நட்ட விவகாரத்தில் கைதான அமர் பிரசாத் ரெட்டிக்கு நவ.3 வரை நீதிமன்ற காவல் விதித்து தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது பூஜை விடுமுறை நாட்கள் என்பதால் நீதிமன்றங்கள் இயங்காது. அதனால் அமர் பிரசாத் ரெட்டி பெயில் பெறுவதும் சிக்கலாகி உள்ளது.
இந்த நிலையில்தான் சிறையில் உள்ள அமர் பிரசாத் மீது ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

பாஜக நெருக்கம்: இதில் பாஜகவினர் பலரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. முக்கியமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிக நெருக்கமாக இருக்கும் பல தலைவர்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன.
ஆர்.கே சுரேஷ் போன்றவர்கள் அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவர்கள். இவர்கள் தற்போது தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார் மூலம் குறி வைக்கப்பட்டு உள்ளனர். வேலூரை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது. இதில்தான் அமர் பிரசாத் ரெட்டி பெயரும் அடிபட்டு வருகிறது.
திட்டம் பாஜக: ஏற்கனவே சிறையில் இருக்கும் அவரை இந்த வழக்கில் கைது செய்ய போலீசார் திட்டமிடலாம் என்று கூறப்படுகிறது. இது அண்ணாமலை தரப்பிற்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அண்ணாமலைக்கு எல்லாமுமாக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. தற்போது அண்ணாமலையின் நடைப்பயணத்தை திட்டமிடுவதே அமர் பிரசாத் ரெட்டிதான். அவரின் முழு திட்டமிடலில்தான் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலை தரப்பும் இந்த கைதால் அதிர்ச்சி ஆகி உள்ளது.












Click it and Unblock the Notifications