பயிர்க்கடன் அதிரடி.. விவசாயிகளுக்கு சூப்பர் நம்பிக்கை! பயிர் கடன் பெறுவதில் இந்த சான்றிதழ் அவசியம்
சென்னை: தமிழக கூட்டுறவு அமைப்புகளில், வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு, தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.

கூட்டுறவு துறை: அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.. குறிப்பாக, "தமிழகத்தில் நடப்பாண்டு கூட்டுறவு அமைப்புகள் மூலம், ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகள் வாரியாக குறியீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயிர்க்கடனில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும், 20 சதவீதம் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். பட்டியலின வகுப்பு, பழங்குடியினரின் நில உடமையின் அடிப்படையில், 20 சதவீதம் குறியீட்டினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிர்ணயம் செய்யவேண்டும்.
ஒழுங்குமுறை விதிகள்: நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டிற்கு மேலாகவும் தேவைப்படும் நேர்வில், தகுதியான விவசாயிகளுக்கு வங்கிகள் ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும். பயிர்க்கடனில் அதிக அளவில் தகுதியுள்ள விவசாயிகள் பயன் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். பயிர்க்கடன் வழங்குவதில் எவ்வித புகாரும் இருக்க கூடாது. தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கி, ஆண்டு குறியீட்டினை முழுமையாக எய்திட தனிக்கவனம் செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், பயிர்க்கடன் குறித்த இன்னொரு தகவல் வெளியாகியிருக்கிறது.. அதாவது, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை, குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப செலுத்தி விட்டால், வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
புதிய உத்தரவு: இதற்காகவே, கடன் வழங்கும்போது, விவசாயிதான் என்பதை உறுதி செய்வதற்காக, சிட்டா, அடங்கல் சான்றிதழ் பெறப்படுகிறது. ஆனால், ஒருசில சங்கங்களில், அந்த ஆவணங்கள் இல்லாமலேயே கடன் வழங்கப்படுவதாக புகார்கள் கிளம்பியிருக்கின்றன. அதனால்தான், ஒவ்வொரு முறையும், பயிர்க்கடன் வழங்கும்போது சிட்டா, அடங்கல் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளதாம்..
அதுமட்டுமல்ல, குத்தகை நிலமாக இருந்தால், நில உரிமையாளரிடம், 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் அல்லது சுய உறுதிமொழி பத்திரம் அல்லது வி.ஏ.ஓ., சான்றிதழை பெற வேண்டும், கோவில் நிலமாக இருந்தால், அறநிலையத் துறை செயல் அலுவலரிடம் சான்றிதழை பெற வேண்டும் என்று சங்க அதிகாரிகளுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டிருக்கிறதாம்.
சபாஷ்: இதுபோன்ற கூட்டுறவுத்துறையின் அதிரடி நடவடிக்கைகளால், தகுதியான அனைத்து விவசாயிகளுக்குமே கடன் தொகையை பெற முடியும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications