இன்றும் நாளையும் மட்டும் 4500 சிறப்பு பேருந்துகள்.. கடைசியாக புறப்படும் பேருந்துகளின் முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், வெளியூர் செல்பவர்களின் நலன் கருதி இன்றும் நாளையும் மட்டும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவலின் வேகம் குறைந்திருந்தாலும், வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.

தமிழகத்தில் ஊரடங்கு
நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 467 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னையில் தற்போது வைரஸ் பரவலின் வேகம் குறைந்திருந்தாலும், கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தலைநகர் தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரடங்கு முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு
இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே 24ஆம் தேதி முதல் ஒரு வாரம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் காய்கறி, மளிகைக் கடைகள் இயங்கவும்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் விநியோகம் உள்ளிட்ட மிக அத்திவாசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள்
தமிழகத்தில் தற்போது பேருந்து சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், வெளியூர் செல்பவர்களின் நலன் கருதி இன்றும் நாளையும் மட்டும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள், வெளியூர் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4500 சிறப்பு பேருந்துகள்
அதன்படி தமிழகத்தில் இன்றும் நாளையும் 4,500 திறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து மற்ற முக்கிய நகரங்களுக்கு மட்டும் 1500 சிறப்புப் பேருந்துகளும், கோவை, திருப்பூர், சேலம், திருச்சி மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே 3000 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்துக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

கடைசி பேருந்து
மேலும், இரு நாட்களில் தேவைக்கேற்ப இரவு நேரங்களில் சிறப்புப் பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாளை (மே 23) முக்கிய நகரங்களுக்குப் புறப்படும் கடைசி பேருந்துகளின் நேரமும் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மார்த்தாண்டம் செல்லும் கடைசி பேருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும்
சென்னையிலிருந்து நாகை, தூத்துக்குடி செல்லும் கடைசி பேருந்து மாலை 7 மணிக்குப் புறப்படும்
சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் கடைசி பேருந்து மாலை 7.30 மணிக்குப் புறப்படும்
சென்னையிலிருந்து நெல்லை, திண்டுக்கல் செல்லும் கடைசி பேருந்து இரவு 8 மணிக்குப் புறப்படும்
சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் கடைசி பேருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்படும்
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கடைசி பேருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்படும்

மின்னணு சேவை நிறுவனங்கள்
மேலும், மின்னணு சேவை நிறுவனங்கள் (E commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம். உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. swiggy & Zomato போன்ற நிறுவனங்களில் உணவு விநியோகம் செய்யவும் மேற்கண்ட நேரங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications